குற்றால சீசன் அபாரம்: குளித்து மகிழத்தான் ஆளில்லை
1 min read
Courtalam season is wonderful but People are not allowed
அருமையான சீசன்; ஆர்ப்பரித்து விழும் அருவிகள்;
அனுபவித்து மகிழத்தான் ஆள் இல்லை, குற்றாலத்தில்
குற்றாலம்… இந்த பெயரைக்கேட்டதுமே இதமான தென்றல், இளவெயில், ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவிகள் என சுகமான நினைவுகளில் தமிழக மக்கள் மூழ்கி விடுவார்கள். ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவக்காற்றை கொண்டு வரும் ஜூன் மாதம் எப்போது பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் குற்றால சுற்றுலாவுக்கான திட்டங்களில் பலரும் முனைப்பு காட்டுவார்கள்.
இந்த 2020 ஆண்டில் ஜூன் பிறந்து விட்டது; தென்மேற்குப்பருவக்காற்று வீசத்தொடங்கி, கேரளாவில் பருவ மழையும், தமிழக எல்லையான குற்றால மலையிலும், மலையைச்சுற்றிய பகுதிகளிலும் பன்னீர் தெளிப்பது போல் சாரலும் விழுந்துகொண்டு இருக்கின்றன. “மெயின் பால்ஸ்” எனப்படும் பேரருவியிலும், ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. குற்றாலத்திலும், அதையொட்டிய தென்காசி நகரத்திலும் எங்கு நின்றாலும் தென்றல் காற்று வருடிச்செல்கிறது.
வழக்கமாக குற்றாலத்தில் சீசன் தொடங்கி விட்டது என்ற சேதி கிடைத்ததும், தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்கள் குற்றாலம் நோக்கி படையெடுத்து விடுவார்கள். அருவிகளில் ஒருமுறை அல்ல; பலமுறை குளித்தாலும் ஆசை தீராமல் அடுத்த நாளும் தங்கியிருந்து குளிப்பார்கள். இதனால் சிற்றூராக இருந்தாலும், சீசனின் போது குற்றாலம் பேரூராக களைகட்டி காட்சியளிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி விட்டது. சுற்றுலா என்ற சொல்லுக்கு அரசு ஒரு பக்கம் தடை போட்டாலும், மக்களும் அதை மறந்தே விட்டார்கள். வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் நீங்காத நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து, ஊர் எல்லைகள் தோறும் காவல் போன்ற தடைகளைத் தாண்டி, உயிரைப்பணயம் வைத்து ஊர் சுற்றுவதற்கு யார் தான் விரும்புவார்கள்?
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க, சமூக இடைவெளி மிகவும் அவசியம். ஆனால் குற்றாலத்தில் அதை கடைபிடிப்பதற்கு சாத்தியமே கிடையாது. எனவே இந்த ஆண்டு குற்றால சீசனை எல்லோரும் மறந்து தான் ஆகவேண்டும்.
காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி உள்ளூர், பக்கத்து ஊர்க்காரர்கள் அருவி பக்கம் போனால் “ஹெலிகேமிரா” பறக்கவிட்டாவது காவலர்கள் பிடித்து விடுவார்கள்.
தென்காசிக்கு ரூ.100 கோடி இழப்பு?
குற்றாலம் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து சமீபத்தில் உதயமான புதிய மாவட்டமாகும்.
உதித்த முதல் ஆண்டிலேயே அம்மாவட்டத்துக்கு இப்படி ஒரு சோதனை வந்து விட்டது. குற்றால சீசன் என்பது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி, ஆகஸ்டு மாத மத்தியில் முடிவடையும். இந்த இரண்டரை மாத காலத்தில் குற்றாலத்திலும், அதை ஒட்டிய நகரங்களிலும் வர்த்தகம் வளமாக இருக்கும். குற்றாலத்தில் தற்காலிக கடைகள், தங்கும் விடுதிகள் மூலம் எக்கச்சக்கமான பேர் வாழ்வாதாரம் பெறுவார்கள். அருவிக்கு வரும் பயணிகள் குற்றாலநாதரையும் தரிசிக்க வருவதால் கோவில் வருமானமும் அதிகரிக்கும். சுற்றுலா வாகனங்கள் வைத்திருப்போர் கையிலும் கணிசமாக காசு புரளும். குற்றாலம் வரும் வழிநெடுகிலும் ஓட்டல்களில் வியாபாரம் இரட்டிப்பாக நடக்கும்.
இந்த வகையில் குற்றால சீசன் காலத்தில் மட்டும் பல்வேறு மட்டங்களில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு அனைத்தையும் கொரோனா தட்டிப்பறித்து விட்டது.
அருவிகளில் விழுவது தண்ணீர் அல்ல’ கண்ணீர்
இன்றைய நிலையில், குளுகுளு குற்றாலம் ஆள்அரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரினில் பழுத்த பலா…” என்று புரட்சிக்கவிஞர் கவி வடித்தது போல், அருவிகள் ஆர்ப்பரித்துக்கொட்டினாலும் உள்ளூர அழுதுகொண்டு வெள்ளமாய் கண்ணீரை வடிக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
என்ன செய்யமுடியும்? இதுவும் இயற்கையின் ஒரு விளையாட்டு என கடந்து செல்வோம்.