உரிமை – சிறு கதை – முத்துமணி
1 min read
Urimai – Short story by Muthumani
7-5-2020
ராமசாமி ஏட்டையான்னா எல்லாருக்கும் பயம்தான்.
பயப்படுறாங்க என்பதற்காக, அவரை,ரொம்ப கெடுபிடியான ஆளு, உத்தியோகத்தில் ரொம்ப கண்டிப்பான ஆளு, தப்பு செஞ்சு, கையில் கிடைச்சா முதுகுத் தோலை உரிச்சிடுவாரு, பக்கா ஜென்டில்மேன் தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரின்னு மட்டும் தப்புக் கணக்கு போட்டுடாதீங்க.
டிபார்ட்மெண்டில் முப்பது வருஷம் சர்வீஸ். டூட்டில ரொம்ப சின்சியர் தான் .ஹெல்மட் போடாமல் போறவன், சைக்கிளில் லைட் இல்லாம போறவன், நோ என்றிக்குள் போறவன், மட்டுமில்ல. லைசன்ஸ் உட்பட எல்லா உரிமைகளையும் வைச்சிக்கிட்டு, சரியான ரூட்டில் வருபவன் கூட ஐயா நிற்பதைப் பார்த்துட்டா, திரும்பி இரண்டு ஊர் சுற்றியாவது வீட்டுக்குப்
போய் விடுவான்.
நடந்து போறவனிடம் கூட “ஏண்டா ஹெல்மெட் போடல? எடு அம்பத” என்று வசூலித்தால் , எவன்தான் கண்ணில் படுவான் ?அதனால்தான் அவர் சிம்மசொப்பனமா இருக்கார். வெளியில்தான் அவரைக் கண்டால் எல்லாருக்கும் பயம். வசூல் சக்கரவர்த்தி. வீட்டுக்குள் அவர் 23ஆம் புலிகேசி. அந்த அம்மா அதட்டிப்பேசினா கூட அடங்கித்தான் போவார்.
தீபாவளி நெருங்கி வருது .ஒரு வாரம் தான் இருக்கு. இன்னும் மனைவிக்குச் சேலை வாங்கித் தரலை ஏட்டையா. “ஒரு வாரம் தான் இருக்கு கடையில கூட்டமா கிடக்கு .நீங்க பாட்டுக்கு பகல் ராத்திரின்னு டூட்டிக்கு போரீங்க”
“இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கம்மா இரவு டூட்டிக்கு போறேன் காலையில பணத்தை வாங்கிக்க. உன் இஷ்டப்படி துணிமணி எடுத்துக்கோ” கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு ஸ்டைலா வண்டியில் புறப்பட்டார் ஏட்டையா.
ஊரின் முக்கியமான முக்கு ரோட்டில் போய் நின்னுகிட்டு ஏதாவது லாரி வருதா ? ஆவலோடு பார்த்துக் கிட்டே இருந்தார் கையில் லத்தியோடு. கடைசியில் வெளியூர் லாரி ஒன்று வர இரவு ஒரு மணிக்கு மேல் ஆயிற்று. ஏட்டையா கண்ணில் சந்தோசம். டார்ச் லைட் அடித்து “நிறுத்து நிறுத்து ” என்று ரொம்ப சின்சியரா நிப்பாட்டி வைத்து ,செக் பண்ணினார் . லைசன்ஸ், ட்ரிப் சீட், இன்சூரன்ஸ் “லைட் “வைப்பர்” லோடு “யூனிஃபார்ம் எப்சி” எல்லாம் சரியா வைத்திருந்தான் அவன். கடைசியில் ஹெட் லைட்டில் ஏன் கறுப்பு மை அடிக்கவலை? என்று கேட்டு அவனை மடக்கி கேஸ் போடாமல் இருக்க மாமூல் வாங்கி பாக்கெட்டில் வைத்தார். நிம்மதி மூச்சு விட்டார்.
வீட்டுக்கு வந்து சேரவே விடிந்துவிட்டது. கதவைத் திறந்துவிட்ட மனைவியின் கைநிறைய பணத்தைக் கொடுத்தார். உன் இஷ்டத்துக்கு சேலை எடுத்துக்கோ குளித்துவிட்டு சாப்பாடு முடித்து கட்டிலில் சாய்ந்தார்.
பத்து மணி இருக்கும் “ஜவுளி கடைக்குப் போயிட்டு வரேன் பக்கத்து வீட்டு அக்காவோட” என்று சொல்லிட்டு போனா. இவர் காதில் அது விழவில்லை. அயர்ந்து தூங்கி விட்டார். மதியம் சாப்பிடத்தான் எழுந்தார். சாப்பாடு முடிந்ததும் “என்னம்மா? சேலை எடுத்தியா?” என்ன கலர்ல எடுத்த?” எத்தனை எடுத்த ?”என்று ஆர்வத்தோடு கேட்டார்.
“எடுத்தாச்சு எடுத்தாச்சு கொடுத்த பணத்துக்கு ஒரு பட்டு சேலை எடுத்தாச்சு “என்றாள். ராமையாவுக்கு சந்தோசம் சாப்பிட்டு முடித்தவுடன் மனைவியைப் புது சேலையில் பார்க்க ஆசை பிறந்தது.
“பொன்னம்மா, என் ராசாத்தி புதுசா வாங்கின சேலையை என் கண்ணுல காட்டல, இப்ப உடனே அந்த சேலையக்கட்டிக்கிட்டு வந்து மாமா முன்னால நில்லுடா” என்று ஜொள்ளு வடித்தார்.
ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனவள் பத்து நிமிடத்தில் பட்டுச்சேலை பள பளக்க வந்து நின்றாள்.
“சூப்பர் மா. உன் கலருக்கு மேட்ச் ஆயிருக்கு. உனக்கு அம்பது வயசுன்னா எவன் நம்புவான்? கல்யாணத்து அன்னைக்கு பார்த்த மாதிரியே இன்னைக்கும் இருக்கியே! நாலு பிள்ளை பெத்த மாதிரியா இருக்க? புது பொண்ணு மாதிரி ஜொலிக்கிரியே! என்று மனைவியைப் புகழ்ந்தபடியே தொட வந்தார்.
” நில்லுங்க தொடாதீங்க .நேத்து ராத்திரி உங்களுக்குப்பணம் கொடுத்த அந்த லாரி டிரைவர் வந்திருக்காரா? “என்று கேட்டாள். ஒன்றும் புரியாமல் ஏட்டையா “அவன் எப்படி வருவான்? அவன் எதுக்கு வரணும் ?”என்று கேட்டார்.
” ஆமா இது அவன் கொடுத்த பணத்தில் வாங்கின சேலை தானே. அப்போ அவன்தானே பாராட்டணும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?
வாங்குற சம்பளம் வயித்த நிறைக்குதோ இல்லையோ, அரை வயித்துக்கு கஞ்சி ஊத்தினாலும் புருஷன் உழைச்சி சம்பாதிச்ச பணமா இருந்தா, அதுதான் பொண்டாட்டிக்கு சந்தோசம். நீங்க உழைச்ச காசுல ஒரு நூல் சேலைய வாங்கிக் கொடுத்துட்டு இப்படிப் பாராட்டிருந்தா என் மனம் நிரஞ்சி இருக்கும். தாலி கட்டுன நாளிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் எவனாவது ஒரு லாரி காரந்தானே புடவை வாங்கி தாரான். நான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாவது என் புருஷன் சேலை வாங்கித் தரனும் அதை உடுத்தனும். இந்த ஆசை எனக்கு இருக்காதா?”.