அண்ணனா அவன்? – சிறுகதை – கடையம் பாலன்
1 min read
Annana Avan? – Short story By Kadayam Balan
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அதற்குள் எத்தனை வேலைகள். எப்படித்தான் முடிக்க போகிறோமோ என்ற கவலை பெற்றவர்களுக்கு. ஒரேஒரு மகள் திருமணத்தை எப்படிஎப்படியெல்லாமோ நடத்த வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தான் நடராஜன். அதேபோல் நல்ல பணக்கார இடத்தில் தன் மகளை கொடுக்க வேண்டும் என்பதுதான் ரங்கம்மாளின் ஆசை. நினைத்தது எல்லாம் நடந்து விடுமா என்ன?
மணப்பெண் ரேகாவை அழைத்தான் நடராஜன். திருமண அழைப்பு யார்-யாருக்கு கொடுக்கணும்ன்னு வரிசையா எழுது.
ரேகா கத்தையாக திருமண அழைப்பிதழை எடுத்து வந்தாள். தந்தை சொன்ன ஒவ்வொரு பெயரையும் அழைப்பிதழில் பதித்தாள். தந்தை விட்டுப்போன பெயரை அவளே ஞாபகப்படுத்தி எழுதினாள்.
முருகன், கணேசன்… என பெயரை எழுதும்போதே அடுத்தவீடு பெரியப்பா பரமசிவன் என்பதை நினைக்கும்போதே ரேகாவுக்கு கை உதறியது. ஆனால் நடராஜனுக்கோ முகமெல்லாம் மாறியது.
இப்போதைக்கு அந்த வேலையை தொடர வேண்டாம் என்ற மனநிலைக்கு தந்தையும் மகளும் தள்ளப்பட்டார்கள். அப்புறமா மத்தப் பெயரை எழுதிக் கொள்ளலாம் என்று எழுந்து போய் துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.
“ஏங்க… இன்னிக்கு கருக்கல்ல.. உங்க அண்ணன் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வருவோம்..”
“என்னடி சொன்ன… யாருக்கு? அவனுக்கா. உனக்கென்ன கிருக்கு பிடிச்சு போச்சா?..”
“என்னதான் இருந்தாலும் உங்க அண்ணங்க.. அவங்கள கூப்பிடாட்டா ஊரு என்ன சொல்லும்?”
“ஊரு என்ன சொன்னா எனக்கென்ன? நாம கஷ்டத்துல இருந்தப்ப யாரு நமக்கு உதவி பண்ணினா?”
என்று கத்தினான் நடராஜன். முகமெல்லாம் அப்படியரு ஆக்ரோஷம்.
“அம்மா, அப்பா சொல்றதுல என்ன தப்பு? பெரியப்பாவாம்… பெரியப்பா. அவசரத்துக்கு உதவி கேட்டா… அதை ஒரு சாக்கா வைச்சி நம்மள படுதாளத்துக்கு தள்ளிவிட்ட ஆளு அவரு… அதை ஞாபகத்துல வச்சிக்கோ…” &இது மகளின் ஆவேசம்.
நடராஜனுக்கு திருமணம் ஆனதும் சொத்துக்களை சரிசமமாகத்தான் பெற்றோர் பங்கு வைத்து கொடுத்தார்கள். அண்ணன் பரமசிவன் ஏற்கனவே வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது… சீட்டு நடத்துவது என பண வியாபாரம் செய்து வந்தான். அதனால் அந்த தொழில், பாகப்பிரிவினைக்குப் பிறகு அவனை மேலும் செல்வ செழிப்பாக்கியது.
அதேபோல் தானும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் நடராஜன் வியாபாரத்தில் ஈடுபட்டான். தொழிலில் அவனுக்கு ஓரளவு லாபம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால் அவனது போதாத காலம் தொழிலில் எதிர்பாராத பின்னடைவு. நல்லா வளர்ந்தவர்கள் பின்தங்கும்போது அதை வெளியே காட்டமாட்டார்கள். வளரும் தொழில் நலிவடைந்த போதும் அதை எப்படியாவது தூக்கி நிறுத்த நினைப்பார்கள். அப்படித்தான் நடராஜனும் நினைத்தான். கடன் வாங்கினான். கடன் பெருகிய அளவுக்கு வருமானம் பெருகவில்லை.
நடராஜன் வாழ்க்கைவசதி தேய்பிறையாகவும், பரமசிவனின் வாழ்க்கை வளர்பிறையாகவும் இருந்தது. வெளியில் பலரிடம் கடன் வாங்கினாலும் அண்ணனிடம் கடன் வாங்குவது தனக்கு கவுர குறைச்சல் என்று எண்ணி இருந்தான் நடராஜன். ஆனால் ஒரு கட்டத்தில் அண்ணனிடமே தஞ்சம் புக வேண்டிய நிலை உருவானது.
“தம்பி நீ யார் யாரிடமோ கடன் வாங்கி கொடுக்க முடியாம இருக்கங்கிறது எனக்கு தெரியும். நீ தம்பின்னாலும் வாயும் வயிறும் வேறதான். ஆனாலும் உன் மேலே எனக்கு ரத்தபாசம் உண்டு. அதனால் மற்றவங்கள விட உனக்கு ஒரு வட்டி குறைச்சி தாறேன். ஆனால் நீ வாங்கின கடனுக்கு வயல மட்டும் அடமான தரணும்.”
அண்ணனின் இந்த கண்டிஷன் நடராஜனுக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு பணத்தேவை இருந்தது. பிறரிடம் வாங்கிய கடனையே கொடுக்க வழியில்லாதபோது அண்ணிடம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது? விதி அவனிடம் இன்னும் விளையாடியது.
அடுத்ததாக இன்னொரு வயல்.. என இறுதியில் வீட்டை அடமானமாக வைத்து பணம் பெற்றான். காலம் கடந்தது. ஒருநாள் அண்ணன் வந்து “கொடுத்த கடனை கொடுக்கிறாயா.. அல்லது வீட்டை காலி பண்றியா?” என்று கேட்டபோது நடராஜனுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ரேகாவுக்கு பெரும் அதிர்ச்சி…
“சரி வீட்டையும் வயலையும் வித்து உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தர்றேன். அதனால வீட்டு அடமான பத்திரத்தை தா” என்றான், நடராஜன்.
“என்ன… வீட்டு அடமான பத்திரமா? நீ வாங்கின கடனுக்கு வட்டிய மட்டும் போட்டுப்பாரு.. அதுக்கு வீட்டு வெல எம்மாத்திரம்… அப்படியே வித்தாலும் கூடுதலா நீதான் பணம் தரணும்.”
இப்படி சொன்னதும் நடராஜனுக்கு தூக்கி வாறிப்போட்டது. எப்படி எப்படியோ கெஞ்சி பார்த்தும் பரமசிவன் மனம் இறங்கவில்லை.
இறுதியில் வயல்களை மறந்து வீட்டையும் காலி செய்து, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தான். உயர்ந்த வீட்டில் வசித்தவன் ஓட்டு வீட்டுக்கு வந்தான். முன்புபோல் அவனால் தொழிலை நடத்த முடியவில்லை. ஆனாலும் அவன் குடும்பப் பின்னணியை கொண்டு பெரு வியாபாரி ஒருவரின் பொருளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்று கொடுத்து வந்தான். அதைக் கொண்டு குடும்பத்தை நடத்தினான்.
இந்த நிலையில்தான் மகளுக்கு நல்ல வரன் வந்தது. பழைய நிலையில் இருந்து ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும் இன்றைய நிலையில் இருந்து பார்த்தால் மாப்பிள்ளை எவ்வளவோ மேல்.. பக்கத்து ஊர். சொந்த வீடு. நல்ல உழைப்பாளி. இப்போதைய சூழ்நிலையில் இப்படி மாப்பிள்ளை கிடைப்பது அரிது. அதுவும் அவர்களாகவே வந்து பெண் கேட்டார்கள்.
“எங்களுக்கு பெண் பிடிச்சிருக்கு… உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க, போதும்.” என்றதால் நடராஜனும் திருமணத்திற்கு சம்மதித்தார்.
கையில காசு அதிகம் இல்லாவிட்டாலும் விருந்து ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நடராஜன் நினைத்தான். அதற்காக கடைகளுக்குச் சென்று பெரிய லிஸ்டையே கொடுத்தான். எப்படியும் மொய்ப்பணம் வந்தவுடனே பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்ற உத்ரவாத்தில் கடைக்காரர்கள் திருமண சாப்பாட்டிற்கு வேண்டிய பொருட்களை கொடுத்தனர்.
திருமணம் கோலாகலமாக நடந்தது. நடராஜனின் அண்ணன் வீட்டாரைத் தவிர எல்லோரும் வந்தார்கள். எந்த கஷ்டத்திலும் ஊரில் நடந்த எந்த வீட்டு கல்யாணத்துக்கும் செல்லாமல் இருந்தது கிடையாது. அதனால் அவன் வீட்டு திருமணத்திற்கும் ஊரே திரண்டு வந்தது.
தாலிக் கட்டி முடிந்ததும் மாப்பிள்ளையும் பெண்ணும் மணவறையை மூன்று முறை வலம் வந்தார்கள். அடுத்து உறவினர்கள் அன்பளிப்பு கொடுக்க.. விருந்து இன்னொரு புறம் நடந்து கொண்டிருந்தது. தாலிக்கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை&பெண்ணை பார்க்க மொய்த்த கூட்டம் பந்தி ஆரம்பித்ததும், அந்த இடத்திற்கு ஐக்கியமானார்கள். இதனால் மணமக்கள் அருகே கூட்டம் இல்லை.
இந்த நேரத்தில் திருமணப்பந்தலுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. காலி இருந்து வாட்டச்சாட்டமான இரண்டு பேருடன் பரமசிவன் இறங்கினான். திருமணப் பந்தலுக்குள் வந்தான்.
உறவினர்கள் வாங்க.. என்று அழைத்தாலும் என்ன நடக்குமே என்று உள்ளூர பயம்தான். பந்தி நடைபெறும் இடம் அருகே நின்று கொண்டிருந்த நடராஜனுக்கு அவன் அண்ணன் வந்த விசயத்த சொல்ல ஆக்ரோஷமானான்.
“இப்போ என்ன… இங்க ரகளை பண்ண வந்திருக்கானா?” என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அங்கே விரைய முயன்றான். அவனை உறவினர்கள் தடுத்து நிறுத்தி பிடித்துக் கொண்டார்கள்.
“கொஞ்சம் அமைதியா இரு.. என்னன்னு பார்ப்போம்” என்றனர்.
பந்தலுக்குள் வந்த பரமசிவன் நேரே மணமக்கள் இருக்கும் இடத்திற்குவிரைந்தான். மாப்பிள்ளை பையன், பரமசிவனை கண்டதும் எழுந்து நின்றான். ரேகா சேலையை சரி செய்வது போல் நடித்து அந்த புறமாக திரும்பி நின்று கொண்டாள்.
மாப்பிள்ளை மட்டும் பரமசிவனின் காலில் விழுந்து ஆசிபெற்றான். பைக்குள் இருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தான். இன்னொரு கவரை ரேகாவிடம் கொடுத்தான். அவள் முகத்தை அந்த புறமாக திருப்பிக் கொண் கவரை வாங்க மறுத்தாள்.
“ரேகா…” கத்தினான்.
“ஏன் கத்றீங்க..”
கூட்டமே அங்கே வந்தது. ஏதோ விபரீதம் நடந்துவிடுமோ என்ற பயம்.
பரமசிவன் ரேகாவின் கையை பிடித்து தனியாக ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.
“இங்கே யாரும் வராதீங்க…”
அதற்குள் நடராஜன் அங்கு வந்தான். “என் மகளை எதுக்கு அங்க இழுத்திட்டு போறான்.” பாய முயன்றான்.
ஆனால் உறவினர்கள், அவனிடம், அவனுக்கும் அது மகள்தான் என்று கூறி தடுத்தனர்.
உள்ளே…
“ரேகா உங்க அப்பன் என்னபத்தி தப்பும் தவறுமா சொல்லி வச்சிருக்கான்… அதனாலத்தான் நீ என்மேல இவ்வளவு கோபமாக இருக்க..”
“அவங்க ஒண்ணும் சொல்லல்ல.. எனக்கே உங்களப்பத்தி தெரியும்.”
“ரேகா என்னை விட உனக்கு அவனைபத்தி தெரியுமா? இதோ பாரு அவன் பிறந்ததே எனக்கு தெரியும். நான் வட்டி வாங்கி சம்பாதிச்சவன்தான்… இல்லைன்னு சொல்லல்ல, எனக்கே என் தொழில் பிடிக்கவில்லைதான். ஆனால் வேற தொழில் எனக்கு தெரியல. நான் இந்த தொழில செஞ்சாலும் என்னால யாருக்கும் பிரச்சன வந்தது கிடையாது…”
“ஆமா இவரால நாங்க பட்ட கஷ்டம் போதா..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள், ரேகா.
“இங்க பாரும்மா…
உங்க அப்பா அவனுக்கு கல்யாணம் ஆனவுடன் தனியா தொழில் தொடங்கினது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சி-. அவனுக்கும் நல்ல வருமானமும் கிடச்சிது. ஆனால் அவனுக்கு இருந்த குடிப்பழக்கமும் கூட்டாளிங்களும் அவன கெடுத்தாங்க. குடிகாரக் கூட்டத்த இழக்க விரும்பாக நடராஜனுக்கு வருமானத்தை மிஞ்சிய செலவாக இருந்தது. வியாபாரத்தில் உள்ள லாபத்தை மட்டும் கணக்கு பார்த்து செலவை கணக்குப் பார்க்காதவங்க இந்த உலகத்துல உண்டு. அந்த இனத்தைச் சேர்ந்தவன்தான் நடராஜன். அவனது தொழிலில் பணப்புழக்கம் அதிகரித்தது. அதனால அவன் தன் வியாபாரம் வளர்முகமாக இருப்பதாகத்தான் உணர்ந்தான். இன்னொரு பக்கம் கடன் அதிகமானதை அவன் உணரவில்லை. ஆனால் தொழில் படுபாதாளத்தில விழுந்த பிறகுதான் புரிஞ்சது.
அப்போவாது நிலமைய உணர்ந்து வியாபாரத்தை விட்டுட்டு நம்ம சொத்த பார்த்துக்கலாம். ஆனா முன்னேறணும்ங்கிற வெறியில கடன வாங்கினான். அதை அவனால கொடுக்க முடியல… எல்லாரிடமும் கடனை வாங்கின பிறகுதான் எங்கிட்ட வந்தான். அந்த நேரத்தில் நான் சொத்தை எழுதி வாங்கலன்னா அதை கடன் கொடுத்தவங்க வாங்கி இருப்பாங்க.. அல்லது பணத்துக்காக அந்த சொத்த உங்க அப்பாவே வித்திருப்பான். அதனாலத்தான் நானே வங்கினேன். அப்போ நான் சொத்தையும் வீட்டையும் கைப்பத்தினப் பிறகுதான் நிலைமைய உணர்ந்து சின்னதாக தொழில் செய்ய ஆரம்பிச்சான். ஓரளவு வாழ்கையும் சீராக இருந்தது. இல்லாட்டி அவன் திருந்தி இருக்க மாட்டான்.
இப்போ உனக்கு நல்ல வாழக்கை அமைஞ்சுட்டுது. என்னிக்கு ஆனாலும் உங்க அப்பா சொத்து உனக்குத்தான். இதோ உங்க வீடு, வயல் பத்திரங்கள்.
இந்த சொத்த உன் பெயருக்கு எழுதி வச்சிருக்கேன். இதை உன் பேரன் காலத்து வரையும் நீங்க யாரும் விற்க முடியாது-. அப்படித்தான் எழுதி வைச்சிருக்கேன்.”
பரமசிவனின் பேச்சை கேட்டு… முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் ஊற்றெடுத்தன.
“பெரியப்பா என்னை மன்னிச்சுடுங்க… உங்கள நாங்க தப்பா நினைச்சுட்டோம்.”
“பராவாயில்ல.. இனிமேலாவது நாம ஒற்றுமையா இருக்கணும்..”
“மாப்பிள்ளை என் மகள நல்லா பார்த்துக்கோணும்.”
“மாமா நீங்க சொல்லித்தான், நானே இவளை திருமணம் செய்ய ஒத்துக்கிட்டேன். அதுமட்டுமா.. இந்த திருமணச் செலவே உங்களுடையதுதானே…”
“நான் என் மகளுக்கு செஞ்சிருக்கேப்பா… செஞ்சிருக்கேன் மாப்ளே…”
-&இதையெல்லாம் வெளியில இருந்து கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் ஓடி வந்து தன் அண்ணன் காலில் விழுந்து அழுதான். அவனுக்கு பரமசிவன் அண்ணனாக தெரியவில்லை. அந்த பரமக்கடவுளாக தெரிந்தான்.
“பெரியப்பா உங்க முன்னாடி எனக்கு கல்யாணம் நடக்கல.. என்னை இப்போதாவது மன்னிச்சி வாழ்த்துங்க…” காலில் விழுந்தாள், ரேகா.
“ரேகா, தாலிக்கட்டும் முன்பு நான் இங்க வந்தால் என் தம்பி, கல்யாண வீட்டையே ரணகளமாக்கி இருப்பான். அதனால்தான் முன்னாடியே வரவில்லை. ஆனால் மனக்கண்ணால் பார்த்து உன்னை வாழ்த்தினேன்..”
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது. அதன்பின் நடந்த திருமணச் சடங்குகளில் அண்ணன் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர்.