கொரோனாவுக்கு சித்த மருந்து: நுண்ணுயிரி ஆய்வுக்கு அனுமதி கேட்கிறார், சித்த மருத்துவர்
1 min read
Sidhdha Medicine for Corona
உலகையே உலுக்கி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் இல்லை. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் தன்னிடம் ஒரு மருந்து உள்ளதாகக்கூறி, அதை நுண்ணுயிரியல் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி கேட்டுள்ளார். இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மனு வருமாறு:-
கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய இம்ப்ரோ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் நோயிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்த பக்க விளைவும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்கச் செய்யும். அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இம்ப்ரோ மருந்துக்கு உள்ளது.
சீனாவில் பாரம்பரிய மருத்துவமே கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது. எனவே கொரோனா நோயை குணப்படுத்தும் சித்த மருந்தான இம்ப்ரோவை நுண்ணுயிரி ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
சென்னையில் சித்த மருத்துவ சிறப்பு மையத்தில் சிகிச்சை
இதற்கிடையே, சென்னை ஜவகர் பொறியியல் கல்லூரியில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க 200 படுக்கைகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியுடன் இயங்கும் இந்த மையத்தில் சித்த மருத்துவ சிறப்பு மருத்துவர் வீரபாபு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 3-ந்தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில் 60 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் முழு குணம் அடைந்து வருகிற 10-ந்தேதி வீடு திரும்ப உள்ளனர். கபசுர குடிநீர், மூலிகைத்தேநீர், தாளிசாதி மாத்திரை போன்றவை இங்கு வழங்கப்படுவதாகவும், மத்தியஅரசு, சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்பேரில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கொரோனாவுடன் வேறு சில உடல் பிரச்சினைகளும் குணம் அடைவதாகவும் சிறப்பு மருத்துவர் வீரபாபு தெரிவித்தார்.