ஆதிச்சநல்லூரில் அகழாய்வு -முதுமக்கள் தாழிகள், எலும்புகள் கண்டெடுப்பு
1 min read
9.6.2020
Excavation at Adichchanallur – Massive corridors and bonesதூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் அகழாய்வு பணி துவங்கியது. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன், அகழ்வாராய்ச்சி மாணவர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அகழாய்விற்கு என ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் உள்ள பாண்டிய ராஜா கோயில் அருகில் 3 குழிகளும் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தினை தேடி கால்வாய் சாலை ஓரத்தில் நான்காவது குழியும் அமைத்து அகழாய்வு பணியானது நடந்து வருகிறது. முதலில் சிறு ஓடுகள், மற்றும் வட்ட வடிவில் உலை போன்ற அமைப்பு வெளியே தெரிந்தது. அதை ஆய்வாளர்கள் நுண்ணியமாக அகழ்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கிடைக்கும் பொருள்களை புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையம் அருகில் சேர்த்து வருகின்றனர். கிடைக்கும் பொருள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் உடனுக்குடன் சேகரித்து, விவரம் எழுதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 15 வது நாளான நேற்று அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவை மேல்பகுதியில் சிதைந்தும். கீழ்பகுதி நல்ல நிலையிலும் உள்ளது. இந்த முதுமக்கள் தாழியை பாதுகாப்பாக அகழ்ந்தெடுககும் பணி நடந்து வருகிறது. அதனருகில் இரண்டு எலும்பு துண்டுகள் கிடைத்தன. இவை கை எலும்புகள் போல் உள்ளன.
இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் மற்றும் எலும்புகள் கார்பன்டேட்டிங் அனுப்பபட்டால் இதன் வயதை அறியலாம். அதற்கான ஏற்பாடுகளை ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.