ஒரு(த்)தீ… சிறுகதை / முத்துமணி
1 min read
Oruththi – Short story By Muthumani
காதல் ஆணுக்கு ஈசியா வந்துடுது.பொதுவாப் பெண்ணோட பலஹீனம் இரக்கக் குணம்தான். அதைத்தான் ஆண்கள் சாதகமாப் பயன்படுத்திக்கிராங்க.
நான் சரியாத்தான் இருந்தேன்.பேசிப் பார்த்தான். பின்னாடியே பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வந்து பார்த்தான். அன்பளிப்பு என்று எதையோ வாங்கிக் கொடுக்க வந்தான். பஸ்ஸில் டிக்கெட் எடுத்தான். பூ வாங்கிக்கொண்டு பின்னாடியே அலைந்தான்.
செல்போன் நம்பரை எப்படியோ கண்டுபிடித்துப் பேசினான். ஒரே ஆபீஸில் வேலை செய்தால் உடனே காதல் வந்துடுமா?. காதலுக்குச் சாதி, மதம் இல்லை என்பதிலும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
“நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது , நீ இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்”.என்ற கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்து என்னை வீழ்த்தி விட்டான். அவனது கண்ணீர் என் மன உறுதியைக் கரைத்து விட்டது.
“உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். சாவே வந்தாலும் உன்னோடு சேர்ந்து சாவேன். “
எப்படியெல்லாம் வசனம் பேசினான். எங்கிருந்து தான் ஆண்களுக்கு இதுபோன்ற வசனங்கள் எல்லாம் உற்பத்தி ஆகுமோ?.
” என் சம்பாத்தியத்தில் தான் எங்க குடும்பமே நடக்க்குது.
நான் கழுத்தில் போட்டிருக்கும் செயினைத் தவிர வேறு ஒரு பொட்டுத் தங்கம் கூட எங்கள் வீட்டில் கிடையாது. என் தங்கை பத்து படிக்கிறாள். என் தம்பி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அப்பாவிற்குக் கேன்சர். படுத்த படுக்கைதான், அப்பாவைக் கவனித்துக் கொள்வதற்காக, அம்மா வேறு வேலைக்குப் போவதில்லை. தம்பி, தங்கையின் படிப்பு முடியும் வரை நான் கல்யாணம் செய்து கொள்வதாக உத்தேசம் இல்லை. உங்கள் வற்புறுத்தலுக்காக பண்ணிக்கிட்டா, என் சம்பளம் முழுசையும், எங்க அம்மா கையில் தான் கொடுப்பேன். வரதட்சணையாக எதுவும் தர இயலாது. இதுக்கு நீங்கள் சம்மதித்தால் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. உங்க அன்பு உண்மையா?. நம்புறேன். ஏதோ, என் மேல இனக்கவர்ச்சி…, சும்மா வாக்குறுதி கொடுத்துட்டு, பின்னாலே என் வாழ்க்கைய நரகமாமாத்திடாதீங்க.”
“லில்லி நீ இப்படி பேசுறது எனக்குக் கஷ்டமா இருக்கு . உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு கிட்டு தான் நான் உன்ன லவ் பண்றேன். நீ சொன்ன எல்லாத்துக்கும் நான் சம்மதிக்கிறேன. இது சத்தியம். எனக்கு அம்மா மட்டும்தான். நான் சொன்னா கேப்பாங்க.”
” இங்க பாருங்க சுரேஷ், அப்புறம் எங்கம்மா சம்மதிக்கலை. ரெண்டு பேரும் ஓடிப் போய்விடலாம் அப்படி இப்படியெல்லாம் சொன்னா எனக்குப் பிடிக்காது. உங்க அம்மாவும் நான் சொன்னதுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டா மட்டும் பேசுங்க.
திருமணத்துக்குப் பிறகு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் இப்ப சொன்னது தான் .மற்ற பெண்களைப் போல மனதை மாற்றிக் கொள்ள என்னால் முடியாது. என் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.ப்ளீஸ்.”
சுரேஷ்எல்லாத்துக்கும் சம்மதிச்சப் பிறகு தானே , இந்த வீட்டுக்குள் முதமுதலா வந்தது, இந்த அரக்கியைப் பார்த்து பேசியது, அவள் நல்லவள் என்று நம்பியது, அம்மாவிடம் தயங்கி தயங்கிச் சொன்னது , மணவறையில் தாலி என்னும் வேலிக்குத் தலை கொடுத்தது, எல்லாம் நடந்தது .இரண்டு வருஷம் தானே வண்டி ஓடியது.
சுரேஷ் காதலித்தது , என் ஆத்மாவை அல்ல. என் இதயத்தை அல்ல .என் உடலை .என் இடத்தில் எந்த ஒரு அழகான பெண் இருந்தாலும் அவன் இதைச் செய்திருப்பான். நான் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று சொன்னவன், இன்று தன் தாயுடன் சேர்ந்து கொண்டான். வீட்டுச் சூழ்நிலை தெரிந்து, வரதட்சணை வேண்டாம் என்று சொன்னவ இப்ப “ஒரு பத்து பவுன் தங்கத்துக்கு வக்கில்லாதவளைக் கூட்டிட்டு வந்துட்டியேடா. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகலை.”
” உனக்கு நூறு பவுன் நகை சீரு செனத்தியோட, கிளி மாதிரி பொண்ண பார்த்திருப்பேன். காதல் கத்தரிக்கான்னு , ஒன்னுக்குமத்தவள புடிச்சிட்டு வந்து, பெரிய புரட்சி பண்ணிட்ட்டே!. வாங்குற சம்பளத்தை முழுசாத் தூக்கி அம்மா கையில கொடுத்துடுறா. அவ தங்கச்சி தம்பி படிச்சா என்ன கட்ட மண்ணா போனா நமக் கென்ன?.
நாளைக்கு உனக்கு ரெண்டு குழந்தை குட்டின்னு வந்தா? இவளால முடியாது. “நீ ஒழுங்கா வாழ விட்டால்தானே?” நினைத்துக் கொண்டேன்”.இப்படியே சாகுற வரைக்கும் சம்பளத்தை அள்ளி அங்கேயே கொடுத்தா, நீ நடுத்தெருவுலதாண்டா நிப்ப. அப்பனுக்குத்தான் உடம்பு சரியில்லை. அம்மைக்கென்ன? எங்கேயாவது வேலைக்குப் போனா என்ன! கல்லு மாதிரி இருக்காளே”.
“அத்தை நானும் பொறுத்து பொறுத்து போறேன். அசிங்கமா பேசாதீங்க. ஆரம்பத்திலேயே எல்லாம் நான் சொல்லிட்டேன். தம்பி தங்கச்சி படிப்பு முடிகிற வரைக்கும்என் சம்பளத்தை அம்மா கையில தான் கொடுப்பேன்ன்னு .உங்க மகன் கிட்ட மட்டும் இல்ல .உங்க கிட்டயும் சொன்னேனே. அப்ப என்ன வார்த்தை சொன்னீங்க எல்லாம் மறந்து போச்சா? இப்ப இப்படிப் பேசுறீங்க”.
“எனக்கு அதெல்லாம் தெரியாது நம்மளால முடிஞ்ச உதவிய உங்க அப்பா அம்மாவுக்கு செய்யலாம்.அதற்காக முழு சம்பளத்தையும் கொடுக்கிறது எந்த ஊரு ஞாயம்? நாலு பேரைக் கேட்டுப் பாரு எங்கேயாவது நடக்குமா இந்த அநியாயம்? கழுத்தில் தாலி கட்டியாச்சு. அப்புறம் பிறந்த வீட்டுக்கு உனக்கு என்ன சம்பந்தம்? உங்க அப்பனும் ஆத்தாளும் இருந்தா என்ன செத்தால் என்ன?”
கோபமும் அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் பேச முடியலை.
“இதப் பாருடி அடுத்த மாசத்துல இருந்து சம்பளத்தைக் கொண்டு வந்து என் கையில் கொடு இல்லாட்டி பேசாம நீ உங்க வீட்டுக்கு போயிடு”.
என் மகனுக்குப் பொண்ணு கொடுக்க போட்டி போட்டுக்கொண்டு வரிசையில நிக்கிராங்க.
புரியுது. ஒன்றும் பேசமுடியாமல் அன்னைக்குச் சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு உடனே பஸ் ஏறி அப்பா வீட்டுக்குப் போயிட்டேன்.
அப்பா சொன்னாரு” நாங்க ஏதாவது பிச்சை எடுத்தாவது புளச்சிக்கிறோம்மா. நீ சண்டை சச்சரவு இல்லாம சந்தோசமா வாழனும்.”.
மறுநாள் ஆபீஸில் பார்த்தும் கொஞ்சம் கூட கவலைப் படலை சுரேஷ் .என்ன? எங்க போனன்னு கேட்கவும் இல்லை. நான்கு நாள் கழிச்சுதான் போன் வந்தது. சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கூப்பிடுவார்ன்னு நெனச்சேன். போனில் பேசியது கூட அவர் இல்லை. மாமியார் தான். நீ அங்கேயே இருக்கேனா இருந்துக்க. திரும்ப இங்க வந்தா உங்க வீட்டை வித்து 15 பவுன் நகையோடு வா.
“அத்தான் நல்லவர்தான் அந்தக் கிழவி தான் இதுக்கெல்லாம் காரணம்” சொன்னது தங்கை மீனா. தம்பி சின்ன பையன் ஒன்னும் பேச தெரியல. என்ன கட்டிப்புடிச்சிக்கிட்டான். “யாரும் என்னப் பத்தி கவலைப்படாதீங்க நான் பாத்துக்கறேன்.”
அஞ்சாவது நாள். “அடுத்த சீட்டு அலமேலு கேட்டா உன் வீட்ல சண்டையா?.”மதியம் லஞ்ச் நேரம் சுரேஷ் சீட்டுக்குப் போனேன். கேட்டேன். “எங்க அம்மாவை மீறி என்னால் ஒன்னும் செய்ய முடியாது. ஒரு 15 பவுன் நகை உன்னால கொடுக்க முடியாதா?நீ எதுக்கு இன்னும் சம்பளத்தை உங்க வீட்டுக்கு அனுப்புறே?. உன்னைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல போ போ..”
அன்னிக்குச் சாயங்காலம் மறுபடியும் ஃபோன். கிழவி தான் பேசினா.” வர்ற ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் உனக்கு டைம். 15 பவுன் நகை யோட வரணும் . சம்பளத்த என் கையில கொடுக்கணும்.சம்மதிச்சா வீட்டுக்குவா .இல்லன்னா அங்கேயே இருந்து சாவு. வெறுங்கையோட வந்தியோ தீய வச்சு உன்னைக் கொளுத்திடுவேன். நீ எங்க போனாலும் நடக்காது என் தம்பி மகன் போலீஸ்ல பெரிய உத்தியோகத்தில் இருக்கான். உன்னத் தீய வச்சிக் கொழுத்தினாலும் எவன் கேட்பான்.?”
இன்றுதான் காலையிலேயே கிளம்பி இங்கு வந்து உட்கார்ந்து இருக்கேன். சுரேஷ் எங்கேயும் வெளியே போய்ட்டான். கிழவி எதும் பேசல. சுரேஷ் வந்தாச்சு. எந்திரிச்சேன்.
“என்ன முடிவு எடுத்து ருக்கா கேளுடா?.”.
“புதுசா என்ன சொல்ல போறேன். அப்போ சொன்னது தான் இப்போவும். எந்த மாற்றமும் இல்லை”
"பாத்தியாடா எம்புட்டுத் திமிரு அப்பறம், என்ன மயித்துக்கு இங்க வந்தே.? உன்னை யாருஅழச்சா?
காதல் கீதல்லுன்னு என் பையன் வாழ்க்கையில மண்ணை அள்ளிப் போட்டுட்டியே சண்டாளி”.
“உண்மையைச் சொல்லுங்க, நானா உங்க மகன காதலிச்சேன்? தங்கத்துக்கு எதுக்கு தங்கம்? என் மகனுக்கு நான் வேற, உங்க அம்மா வேறயா? உன் தங்கச்சியும் தம்பியையும் தன் கூட பிறந்தவங்கன்னு நெனச்சி படிக்க வச்சி கரை ஏத்துற பொறுப்ப அவனே பார்த்துக்குவான் .இப்படில்லாம் பேசினதுஎந்த வாய்.”.”இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. நீ மலடி. உன் தங்கச்சிய பேசாம என் மகனுக்கு கட்டி வச்சுட்டு நீ ஒதுங்கிக்க”. சீ.. ஈனப் பண்ணி “. “வேண்டாம்.உன் கோடீசுவர தாயையும் தகப்பனையும் காப்பாத்த , உன் தங்கச்சிய வேற தொழில் பார்க்கச் சொல்லு.”
தீயாய் மனசுக்குள் இறங்கியது வார்த்தைகள்.
“அப்படின்னா உன் புருஷன் செத்தபிறகு’ அது மாதிரி தொழில் பார்த்துதான் உன் பையனைப் படிக்க வச்சியா?”.” பாத்துக்கிட்டு நிக்கியடா என்ன வார்த்தை பேசிட்டா.?” கிச்சனுக்கு ஓடினாள் கிழவி. மண்ணெண்ணெய், தீப்பெட்டி. மண்ணெண்ணையை என் மேல ஊத்துனா .நான் அசையாமல் நின்றேன். “இவ வேண்டாம்டா கொழுத்து, நாளைக்கே உனக்கு வேற கல்யாணம்.” அவன் தயங்க, அவளே தீக்குச்சியைக் கொளுத்தி என் மேல போட்டாள்.
என் உடலைச் சுட்ட தீயை விட என் மனசுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரியது. அதனால் உடம்புக்கு எந்த வேதனையும் இல்லை. இவள் என்ன செய்வாள் இத்தனைக்கும் காரணம் என்னைக் காதலிக்கிறேன்ன்னு பொய்
சொன்ன இந்தக் கயவன் தானே? இவன் இன்னொருத்தி வாழ்க்கையோடு இவன் விளையாடி விடக்கூடாது. “என்னடா சொன்ன?நான் இல்லாம உனக்கு வாழ முடியாது அப்படித்தானே?”எனக்குள் அசுரபலம்’ ஆயிரம் யானை பலம் ஒன்று சேர்ந்து ஒரே ஓட்டமாய் ஓடி அவனை இறுகக் கட்டி அனைத்துக் கொண்டேன்.