June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

உரிமை கொண்டாடும் சீனா கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த கால பின்னணி

1 min read

History of kalvan valay in ladakh

18-6-2020

கல்வான் பள்ளத்தாக்கு. இந்தியா- சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள இந்த இந்திய இடத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது. இங்குதான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆயுதங்கள் இன்றி நடந்த போரில் 20 இந்தியர்கள்  மரணத்தை தழுவினார்கள். சீனா தரப்பிலும் 43 பேரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒரு வரலாற்று பின்னணியே உள்ளது.

இந்திய-சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்ட இடம் கல்வான் பள்ளத்தாக்கு ஆகும். அங்குள்ள கல்வான் ஆற்றின் பெயரை கொண்டு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது. இந்த பகுதி இந்தியா-சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை கோட்டில் உள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு வரை சீனா, கல்வான் ஆறு வரை தனது நாட்டின் எல்லை இருப்பதாக சொல்லி வந்தது.

ஆனால் 1956-ம் ஆண்டு முதல் கல்வான் ஆறும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதியும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கல்வான் ஆறு மற்றும் சீனா வசப்படுத்தி உள்ள அக்சய் சின் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறது. அக்சய்சின் பகுதி தற்போது சீனா வசம் இருந்தாலும், அது இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலில் 1889-ம் ஆண்டு கண்டறிந்தவர் குலாம் ரசூல் கல்வான். லடாக் பகுதியை சேர்ந்த அவர், இங்கிலாந்து மலையேற்ற குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு அங்குள்ள மலைகளில் ஏறி இறங்குவார். அந்த சமயத்தில் தான் அவர் இந்த ஆற்றை முதலில் கண்டுபிடித்தார்.

எனவே தான் அந்த ஆற்றுக்கு ஆங்கிலேயர்கள் கல்வான் பெயரையே சூட்டினர். கல்வான் என்பது காஷ்மீரிய மொழியில் கொள்ளைக்காரன் என்று பொருள். கல்வான் என்பது அவர்களது குடும்ப பெயர் ஆகும்.

குலாம் ரசூலின் தாத்தா பெயர் காரா கல்வான் ஆகும். காரா கல்வான் என்பது காஷ்மீர் மொழியில் கருப்பு கொள்ளையன் என்பதாகும். இவர் காஷ்மீர் மகராஜாவின் படுக்கை அறையில் திருடும் போது கையும் களவுமாக சிக்கி தலை துண்டிக்கப்பட்டார். ஆனால் குலாம் ரசூல் கல்வான், ஒரு சிறந்த மனிதர் என்று ஆங்கிலேயர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குலாம் ரசூல் கல்வான் பற்றி சர்வண்ட் ஆப் சாகிப் என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதி உள்ளனர்.

அந்த புத்தகத்தில் பிரபல பிரிட்டிஷ் ஆய்வாளர் டாக்டர் டாம் லாங்ஸ்டாப், “எங்கள் கேரவன் தலைவரான ரசூல் கல்வான் ஒரு சிறந்த மனிதர். அவர் அனைவராலும் மிக உயர்ந்தவராக மதிப்பிடப்பட்டார். அவரின் தந்தை ஒரு கொள்ளையர் இனத்தைச் சேர்ந்தாலும், அவரது தாய் மாறுப்பட்ட இனத்தை சேர்ந்தவர். எனவே குலாம் ரசூல் கல்வான் இரு குணாதிசயங்களை கொண்டு இருந்தார். அவர் முற்றிலும் நேர்மையானவர்” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இன்றைக்கும் கல்வானின் குடும்பம் லடாக் பகுதியில் உள்ளது. அவர்கள் தற்போது சொந்தமாக விடுதி ஒன்றை நடத்தி வருகின்றனர். ஒரு இந்தியரின் பெயரால் அழைக்கப்படும் இந்த கல்வான் பகுதியை தான் சீனா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி பிரச்சினை செய்து வருகிறது.

மக்கள் வசிக்க முடியாத பகுதி

 இந்தப்பகுதி மக்கள் வசிக்க முடியாத கடும் குளிர் நிலவும் பகுதியாகும். தற்போது அங்கு இந்திய- சீன ராணுவ வீரர்கள் மட்டுமே இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.