இறந்த கணவர் உடலுடன் மனைவி கதறல் – கோவில்பட்டி சோதனைசாவடியில் பரபரப்பு
1 min read
20.6.2020
Wife’s tears with dead husband’s body – Excited at Kovilpatti checkpointதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை லெட்சுமிபுரத்தினை சேர்ந்தவர் காளிராஜ். லாரி டிரைவரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியில் ஆந்திராவிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருச்சி அருகே வரும்போது, காளிராஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காளிராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்று சிகிச்சை பலன் பலனின்றி காளிராஜ் உயிரிழந்தார்.
இதையெடுத்து காளிராஜ் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக அவரது மனைவி, உறவினர் ஒருவர் உதவியுடன் சொந்த ஊருக்கு கொண்டுவந்து கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகேயுள்ள தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் வந்தபோது ஆம்புலன்சை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே ஆம்புலன்சில் உள்ள உடலை கொண்டு செல்ல அனுமதிப்போம் என்றும் அதுவும் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்வதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி இன்றி அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காளிராஜின் மனைவி அங்கேயே கதறி அழுதார். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக காளிராஜ் சடலத்துடன் மனைவி மற்றும் உறவினர் கண்ணீருடன் கலெக்டரின் அனுமதிக்காக காத்து இருந்தனர்.
இதுகுறித்து சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகளிம் கேட்டபோது, மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர் அனுமதி அளித்தால் மட்டுமே உடலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.