June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கர் ஆவணவக் கொலை வழக்கு; கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு

1 min read
Shankar murder case appeal; Kausalya's father's release

22-6-2020

உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேல் முறையீட்டு வழக்கில், கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டார். மேலும்தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கவுசல்யா . இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை காதலித்தார். இதற்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்குப்பின் புதுமணத் தம்பதியர் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர்.

சங்கர் கொலை

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, கவுசல்யாவும் சங்கரும் உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இருவரையும் கத்திகளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த சங்கர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் செல்லுலம் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கவுசல்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தல் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது

11 பேர் கைது

இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. அப்போது 1,500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.

மரண தண்டனை

இதற்கிடையே தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்ற 9 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9-வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டு மனு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பிலும் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட
து. மேலும் 6 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதிசெய்யும்படியும் அரசுத் தரப்பு கோரியது.

இந்த மேல் முறையிட்டு வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணா, நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. பிப்ரவரி 27ம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் அளிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ரத்து

அந்தத் தீர்ப்பில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற ஐந்து குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்களுக்கு எந்த தளர்வும் அளிக்கக்கூடாது என்றும் இவர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு பற்றி அரசுத் தரப்பின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.