காசியின் லேப் டாப்பில் வீடியோக்கள் அழிப்பு
1 min read
காசியின் லேப் டாப்பில் வீடியோக்கள் அழிப்பு
சைபர் க்ரைம் போலீஸ் ஆய்வில் திருப்பம்
22.6.2020
சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியதை தொடர்ந்து வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி உள்ள கணேசபுரத்தை சேர்ந்த காசி (26) மற்றும் அவரது நண்பர் நாகர்கோவில் அப்சர்வேட்டரி தெருவை சேர்ந்த டைசன் ஜினோ (19) ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே உள்ளூர் போலீஸ் தரப்பில் இந்த வழக்குகளில் விசாரணை நடந்தது. அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை பொறுத்தவரை காசி மீது மொத்தம் 5 பெண்கள் புகார் அளித்திருந்தனர். கோட்டார் காவல் நிலையத்தில் சென்னை பெண் டாக்டர், நேசமணிநகர் காவல் நிலையத்தில் பெண் இன்ஜினியர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் என 5 பேர் புகார் அளித்திருந்தனர். இது தவிர வடசேரி காவல் நிலையத்தில் ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவாகி இருந்தது.
இந்த வழக்குகளுக்கு ஆதாரமாக செல்போன்கள், லேப் டாப் ஆகியவற்றை உள்ளூர் போலீசார் கைப்பற்றி இருந்தனர். இதில் 400க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி பெண் டாக்டர்கள், பல குடும்ப பெண்களின் ஆபாச வீடியோக்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சமீபத்தில் சிபிசிஐடி போலீசார் காசியின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். லேப் டாப் மற்றும் மெமரி கார்டுகள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில், சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதை காசியும், அவரது கூட்டாளியான டைசன் ஜினோவும் ஒத்துக் ெகாண்டனர். இதையடுத்து இதுபற்றிய விவரங்களை கண்டுபிடிக்கும் வகையில் சென்னையில் இருந்து சைபர் க்ரைம் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு, அழிக்கப்பட்ட வீடியோக்கள், செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அதில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஆதாரங்கள் சேகரிப்பில் முக்கிய திருப்பமாக பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக காசியுடன் நெருக்கமாக இருந்த சிலரின் வீடியோக்கள், போட்டோக்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர்.