சாத்தான்குளத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
1 min read
New police Inspected at sathankulam
28-6-2020
சாத்தான்குளத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தந்தை மகன் சாவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் விசாரணை கைதியாக இருந்தபோது இறந்தார்கள். அவர்கள் ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவு சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது. கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஆகியோர் சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
பெர்னார்டு சேவியர்
தந்தை, மகன் உயிரிழப்புக்கு போலீசார் தாக்கியதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததால் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக வடசேரி இன்ஸ்பெக்டராக இருந்த பெர்னார்டு சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.