கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கிகள் – இந்தியா நிறுத்தியது
1 min read
Powerful artillery in the Calvan valley
30-6-2020
பதற்றமான கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
எல்லையில் சண்டை
இந்திய-சீனா எல்லைப்பகுதியில் இந்தியாவின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர், சீன தரப்பில் 35 பேர் பலியானார்கள். ஆனால் இதை சீனா மறுத்துள்ளது. எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவலை இன்னும் சொல்லவில்லை.
இந்த சண்டை தொடர்பாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பீரங்கிகள்
இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன. மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.
இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன.
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மூத்த இராணுவத் தளபதிகள் இன்று சுஷூலில் சந்தித்து பரஸ்பர விதிமுறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் படையை குறைத்தல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இந்த நிலையில் இந்தியா தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.
ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவிக்கிறது.