பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை
1 min read5.7.2020
Action ban on Friends of Policeதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ெஜயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விடிய விடிய லாக்கப்பில் வைத்து போலீசார் தாக்கியதாக் அங்கு பணியாற்றிய தலைமை காவலர் மாஜிஸ்திரேட்டிம் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிந்த ஐகோர்ட் மதுரை கிளை, சிபிசிஐடி போலீசாரை விசாரிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரெண்ட்ஸ் ஆப் போலீசார் 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தொியவந்தது. அவர்கள் தந்தை, மகன் இறந்த நாள் அன்றே தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. அந்த 4 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பிரெண்ட்ஸ் ஆப் போலீசாரின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அவர்களை சிபிசிஐடி போலீசாரும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து திருச்சி சரக காவல்துறையில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மக்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள், அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள், மக்களிடம் அதிக கோபப்படுபவர்களின் பெயர் பட்டியலை எடுக்க முன்னாள் டிஐஜியாக இருந்த பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு, அந்த பட்டியலின்படி திருச்சி சரகத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்.ஐக்கள், 49 போலீசார் என மொத்தம் 80 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது, பேசுவது, கோப்படாமல் இருப்பது பற்றி ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சி முடிந்ததும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், ‘‘பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு நேற்றிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கூறுகையில், திருச்சி மண்டலத்தில் திருச்சி கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய மாவட்டங்களில் 110 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், 7 லிருந்து 10 பிரெண்ட்ஸ் ஆப் போலீசார் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் நிலவக் கூடிய தொடர் சர்ச்சைகளை அடுத்து பிரெண்ட்ஸ் ஆப் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன்’’ என்றார்.
இதை தொடர்ந்து பிரெண்ட்ஸ் ஆப் போலீசார் பணிக்கு வரவேண்டாம் என்று அந்தந்த மாவட்ட எஸ்.பி.மூலம் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் மூலம் பிரெண்ட்ஸ் ஆப் போலீசாரை காவல் நிலையங்களுக்கு பணிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 600 பிரெெண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அம்மாவட்ட எஸ்.பி.ராதாகிருஷ்ணன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதே நடைமுறை தமிழ்நாடு காவல் துறையின் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.