மன்னர் குடும்பத்தினருக்குத்தான் பத்மநாப சாமி கோவில் உரிமை; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
1 min readThe Padmanabha Sami Temple belongs to the royal family of Travancore; Judgment of the Supreme Court 13-7-2020 திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் மீதான உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பத்மநாபசாமி கோவில்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதுபற்றிய விவரதம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
இந்தக் கோவிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
வழக்கு
“திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று, சுந்தரராஜன் என்பவர், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதாவது பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.