விருது / சிறுகதை / கடையம் பாலன்
1 min read
Viruthu / Short story by Kadayam Balan
14-7-2020
“ஏல சரவணா… பைக்கட்ட வீட்ல வச்சிட்டு வா.. சில்லாங்குச்சி விளயாடுவோம்”
பள்ளிக்கூடம் விட்டு புத்தகப்பையோடு வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்த சரணவனை மற்ற மாணவர்கள் தடுத்து அழைத்தனர்.
“இல்லப்பா.. நம்மளால வரமுடியாது.”
அடுத்த தெருவில்..
“டேய் சரவணா.. எங்க வீட்டுக்கு வா… கேரம்போடு இருக்கு. விளயாடுவோம்.”
இன்னொரு நண்பனின் இந்த வார்த்தை அவன் மனதை சற்று அசைக்கப்பார்த்தது. ஆனால்.. கடமை அவனை அழைத்தது.
தெருவில் மூன்று குழிப்பறித்து கோலி விளையாடிக் கொண்டிருந்தனர், சில சிட்டுக்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் சரவணனுக்கு மூணு… நாலாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுடன் ஐக்கியமாக ஆசைதான். ஆனால்… காலக்கட்டாயம் அவனைத் தடுத்தது.”
“அண்ணே புதுசா கோலிக்கா வந்திருக்கா?”
“ஆமாடா… ஈஸ்ட் மெண்ட் கலர்ல நிறை கோலிக்கா கடையில இருக்கு. டாங்காவும்( பெரிய சைஸ் கோலி) வந்திருக்கு. அத வச்சி அடிச்சா… சின்னக் கோலிக்கா ஒடஞ்சே போயிடும். சரி… சரி.. கடைக்கு வந்து வாங்கிகிடுங்க.”
அடுத்து அவனது ஓட்டத்தை தடை செய்தது, அந்த வால்போஸ்டர். மாஸ்டர் மகிஷ் முக்கிய வேடத்தில் நடித்த படம். சுவரில் ஸ்டையிலாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அந்த குட்டி நடிகரை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பள்ளிக்கூடம் விட்டதும் அங்கன இங்கன நிக்காம ஓடியாந்துடு… கடையில மாத்த ஆளு இல்லப்பா…”
-அப்பா காலையில் சொன்ன வார்த்தை நினைவுக்கு வர மாஸ்டர் மகிசை பிரிய மனம் இல்லாமல் ஓடினான்.
“வாப்பா.. செத்த நேரம் கடையில ஒக்காரு.. நான் ஒங்க அம்மைக்கு கஞ்சி காய்ச்சி குடுத்துட்டு வந்திருதேன்.”
“சரிப்பா…”
மகனின் புத்தகப் பையை சுப்பையா வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான். கடை சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினான், சரவணன்.
அது என்னமோங்க… சரவணன் வந்ததும் கடைக்கு கூட்டம் அதிகமாயிடுச்சி..
அவனது இடது கைவிரல்கள் ஒவ்வொரு சமான்களையும் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தன. வலது கை அவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டிருந்தன.
“பேராண்டி நீ ஒங்க அப்பாவுக்கு மட்டும் ராசியானவன் இல்லப்பா.. எனக்குந்தாப்பா.. உன் கையால சுக்கும் மிளகும் தா ப்பா. அத வச்சி சுட்டத்தண்ணி குடிச்சாத்தான் தலைவலி பறந்து போவும்.”
“புள்ளன்னா இப்டி இருக்கணும்… படிப்புக்கு படிப்பு ஆச்சி, பெத்தவங்களுக்கு ஒத்தாசயாவும் இருக்கான்.”
-இப்படி பலர் சரவணனை பாராட்டினாலும் அந்தப் புகழுக்கு மயங்கும் பக்குவம் மட்டும் இன்னும் வரவில்லை.
அந்த சிறு வயதிலேயே சமான்களை லாவகமாக பொட்டலம் போடத் தெரியும். நூலும் கயிறும் இன்றி அவன் போடும் பொட்டலத்தை எளிதில் அவித்துவிட முடியாது. அதேபோல் ஒவ்வொரு சாமானாக கொடுக்கும்போதே அதன் விலையை மனதில் கூட்டி மொத்தப் பணத்தையும் கூறிவிடுவான்.
கடையில் இருந்த அனுபவம் அவனை கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வைத்துவிடும். அதேபோடு மனதாலேயே பல கணக்குகளுக்கு விடையை சொல்லிவிடுவான். அப்படியரு நுண்ணறிவு அவனிடம் வளர்ந்திருந்தது.
முன்பெல்லாம் சரவணனை, சுப்பையா கடைக்கு கூப்பிட மாட்டான். ஆனால் இப்போது வேறு வழியே இல்லை…
அந்த சுப்பையாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்…
சுப்பையா அண்ணாச்சி கடைன்னா அந்தப் பகுதியில் பிரபலம். நியாமான விலையில் தரமான பொருளை விற்பனை செய்வான். மிகவும் சுத்தமானவன். எந்த குளிர், மழை ஆனாலும் சரி குளிக்காமல் கடையை திறக்க மாட்டான். காலையில் அவன் சாமி படத்துக்கு முன்னால வைக்கிற பத்தி வாசம்தான் அந்த பகுதியில் பலரை எழுப்பும். சுப்பையா அப்படி ஒன்றும் வசதியானவன் கிடையாது. ஆனாலும் பணத்தாசை பிடித்தவனும் இல்லை.
அவனது மனைவி வள்ளி கடை வியாபாரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பாள். வீட்டுக்கு பக்கத்தில்தான் கடை என்பதால் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கடைக்கு வந்துவிடுவாள். அதன்பின் சுப்பையா வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் உள்ள டவுனுக்குச் சைக்கிளில் சென்று கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வருவார். அதேபோல் மதியம் சாப்பாடு நேரத்திலும் கடை வள்ளியின் வசமாகிவிடும். இரவு பத்து மணிக்குத்தான் கடையை அடைப்பார்கள்.
சுப்பையா வீட்டுக்கு வருவதற்குள் மகன் சரவணன் தூங்கிவிடுவான். வள்ளி பரிமாற சுப்பையா சாப்பிடுவது அந்த ஒரு நேரம் மட்டும்தான். அப்போது அவர்களிடையே நடக்கும் உரையாடல் கடையைப் பற்றியும், மகனின் படிப்பு பற்றியும்தான் இருக்-கும். சில நாட்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே வாக்குவாதமும் வரும்.
சரவணன் விடுமுறை நாட்களில் மட்டும் தந்தைக்கு உதவியாக கடைக்கு வருவான். மற்றபடி எப்போதாவதுதான் கடையில்…
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அப்பாவைப்போல வேட்டிக்கட்ட, தலை சீவ.. அம்மாவை திட்ட… தோணும். அதேமாதிரி சரவணனுக்கும் கடையில் உட்கார ஆசை. அப்படி ஓர் ஆசையில் எப்போதாவது காலையில் கடை திறக்கும்போது கல்லாப்பெட்டியில் உட்கார்ந்துவிட்டால் அன்றைய வியாபாரம் படுஜோர்தான். அப்படி ஒரு கைராசிக்கார சிறுவன். ஆனாலும் அவனை அடிக்கடி கடையில் ஏற்றினால் படிப்பு பாழாய் போய்விடுமோ என்ற பயம் சுப்பையாவுக்கு.
ஆனால் இப்போது மகனை கல்லாப்பெட்டியில் அமர வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. கடந்த மாதம் திடீரென்று வள்ளிக்கு லேசான வயிற்று வலி வந்தது. இஞ்சி இடித்து குடித்து பார்த்தாள், ஓம வாட்டர் குடித்து பார்த்தாள், நோய் குணமாகவில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்துப்பார்க்கும்போதுதான் தெரிந்தது, குடலில் புண் இருப்பது. எப்படியும் ஆபரேஷன் பண்ணித்தான் ஆகணும்ன்னு டாக்டர் சொல்லிவிட்டார்.
“வேண்டாங்க.. மாத்தரய போட்டு சமாளிச்சிக்கிடுதேங்க… ஓடுத வரைக்கும் ஓடட்டும்”
“என்னப்புள்ள கிழவி மாதிரி பேசற… எவ்ளோ செலவானாலும் ஒனக்கு பாக்காம இருக்க மாட்டேன்.”
வள்ளிக்கு ஆபரேசன் பண்ணி, சிறுகுடலை கொஞ்சம் வெட்டி எடுத்து குணமாக்கியாச்சி. ஆனால் பத்து நாட்களாவது வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்ன்னு டாக்டர் கண்டிசனா சொல்லிட்டாரு. அதுக்கு பிறகும் கடுத்தமான வேலைய செய்யக்கூடாதுன்னு எச்சரித்துவிட்டார்.
“ஆபரேசன் நடந்தது கவர்மெண்ட் ஆஸ்பத்திரியானாலும் பணம் கொஞ்சம் செலவு ஆயிடுச்சி. போதாக்குறைக்கு கடந்த மாதம் தவணையில ஒரு டிவி வேற வாங்கியாச்சி. கடனஉடன வாங்கி கடய நிறைச்சி வச்சிருக்கேன். அதானாலத்தான் இந்த பயல கடையில ஒக்கார வைக்கவேண்டியது இருக்கு” என்று சுப்பையா அடிக்கடி சொல்லி வேதனைப்பட்டுக் கொள்வான்.
கடையில் அமர்வது சரவணனுக்கு அப்படி ஒன்றும் பளுவாகத் தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் பேச்சும் பாராட்டும் அவனை களைப்படைய வைக்கவும் இல்லை.
வீட்டின் நிலைமை அவனை சுறுசுறுப்பாக்கிவிட்டது. எதற்கும் ஆசைப்படாத அவன் அன்றைக்கு தந்தையிடம் ஒன்று கேட்டான்.
“அப்பா.. இன்னிக்கு சாயங்காலம் நான் கடைக்கு வரமாட்டேன்”
“சரிப்பா.”
மாஸ்டர் மகிசுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. ஜனாதிபதி அவனுக்கு விருது கொடுக்கிறத இன்னிக்கு சாயங்காலம் டி.வியில காட்டுறாங்க.. அதாப்பா…”
“சரி கடைக்கு வரவேண்டாம்…”
தந்தையின் குரலில் வேதனை படர்ந்திருந்தது.
“அப்பா… டி.வி.யில நிகழ்ச்சி முடிஞ்சதும் உடனே கடைக்கு வந்துடறேம்பா”
“இல்லடா உம்மேல எனக்கு கோபம் இல்ல.. நீ கடைக்கு வரவேண்டாம். நல்லா படி..”
மகனின் பதிலுக்கு காத்திராமல் கடைக்கு சென்று விட்டான் சுப்பையா.
தந்தையின் வேதனையை சரவணனால் புரிய முடியவில்லை.
“அம்மா… அப்பா ஏன் ஒருமாதிரி இருக்காவ?”
“தெரியலடா… நேத்து ராத்திரியில இருந்தே அப்படித்தான் இருக்காவ. கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்காவ. கடையில சமான் குறைஞ்சிட்டு… அதனாலக்கூட கவலையா இருக்கலாம்.”
“கவலைப்பட வேண்டாம்மா… கலாண்டு பரீட்ச லீவு வரப்போவுது. நான் கடையில முழுசும் உக்காந்து லாபத்த கூட்டி காட்டுதேன். அப்பா வாங்கின கடன எல்லாம் அடைச்சிடுவோம். அப்பாக்கிட்ட சொல்லு… கவலைப்படாம இருக்கச் சொல்லும்மா”
மகனின் தலையை தடவிக்கு கொடுத்து வள்ளி தன்னையும் அறியாமல் ஆனந்த கண்ணீரை சிந்தினாள்.
பள்ளிக்கூடம் சென்று திம்பிய சரவணன் கடை பக்கம்கூட போகாமல் நேரே வீட்டுக்கு வந்தான். டி.வி.யை ஆன் செய்தான்.
“அம்மா இன்னும் பத்தே நிமிசம்தான் இருக்கு. மாஸ்டர் மகிஷ்க்கு விருதுகொடுப்பாங்க. அப்போ அவன் நடிச்ச படத்துல இருந்து சில சீன்கள காட்டுவாங்க. அதப் பாரும்மா உனக்கு புது தெம்பு வந்துடும்.”
மகனின் மகிழ்ச்சி இப்போது வள்ளிக்கு- உண்மையிலேயே புது தெம்பை கொடுத்தது.
சற்று நேரத்திற்கெல்லாம்… டிவியில் ஜனாதிபதி மாளிகையின் படத்தை காட்ட தொடங்கி விட்டார்கள். பிரதமர், மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். மாஸ்டர் மகிஷ் டி.வி. காமிராவுக்குள் புகுந்து புன்னகைத்தான். அந்த புன்னகை சரவணன் வரைக்கும் வந்தது.
அந்த நேரத்தில் நாலைந்து பேர் திமுதிமுவென்று அவனது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னால் சுப்பையா வந்தான்.
“சார்… எப்படியாவது பணத்தை கட்டிடுதேன். டி.வி எடுத்துட்டு போயிடாதீங்க..”
“அதெப்டி உன்னால கட்ட முடியும். கடையிலயும் சரக்கு இல்லை. உனக்கு இன்னிக்கோ நாளைக்கோ ஜெயில் காத்திருக்கு.. அதுக்குப்பிறகு உம் பொஞ்சாதிக்கிட்ட வந்து டி.வி. எடுத்தா நல்லா இருக்காது…”
இப்படி பேசிக்கொண்டே டிவியை ஆப் செய்தனர்.
“சார்… எம் மவன் இந்த ஒரு நிகழ்ச்சிய பார்க்க ஆசஆசயா இருந்தான். இத மட்டுமாவது பாக்க விடுங்க…”
“இது என்னப்பா.. அக்கிரமா இருக்கு… சரி நாங்க பக்கத்து கடையில டீ குடிச்சிட்டு வந்து டிவிய எடுத்துகிறோம்.”
கல்லுக்குள்ளும் கொஞ்சம் கருணை இருக்குமோ..?
“என்னங்க என்னென்னல்லாமோ சொல்லிட்டுப் போறாங்க.. எனக்கு பயமா இருக்கு?”
“ஒண்ணுமில்ல.. பையன் டிவிய பாத்து முடிச்சதும் சொல்றேன்.”
“அப்பா என்னப்பா… சொல்லுங்க.. நான் டிவிய பாக்கல… சொல்லுங்கப்பா.. ஜெயிலு அது.. இதுன்னு சொல்லாங்களே…” கண்ணீருடன் சரவணன் அப்பாவை பார்த்தான்.
“இல்லடா… அப்பாவ அவங்க மிரட்றாங்க.. டிவிக்கு பணம் கொடுக்கல.. அதான்.. நீ டிவியப்பாரு அப்புறமாக விளக்கமா சொல்றேன்”
என்று கூறிக்கொண்டே டிவியை ஆன் செய்தார்.
“அப்பா…”
“என்னங்க புள்ள கேட்றான்ல்ல சொல்லுங்க”
“இல்லடா என்னை யாரும் கைது செய்ய முடியாது. எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன். டிவிய பாருங்க.. அதோ மாஸ்டர் மகிஷ் வர்றான்… ஜனாதிபதிக்கிட்ட போறான் பாரு… சரவணா அதோ விருது கொடுங்காறங்கப்பாரு.”
சுப்பையா நிழச்சியின் நேர்முக வர்ணனையாளர் ஆனான் மகனுக்காக.
மகன் ஆர்வமில்லாமல் தந்தைக்காக டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவருக்காவும், மகனுக்காவும் டிவியை பார்ப்பதுபோல் நடித்து கொண்டிருந்தாள் வள்ளி.
அந்த ஒரு மணி நேரமும் மூன்று பேரும் ஒருவரையருவர் ஏமாற்றி நடித்துக் கொண்டிருந்தனர்.
நிழ்ச்சி முடியவும் டிவி அவர்கள் வீட்டைவிட்டு விடைபெற்றது.
“இப்போவாவது சொல்லுங்க..”
“ஒண்ணுமில்ல.. நம்ம சரவணன் கடையில இருந்தான்ல.. யாரோ வேண்டாதவங்க போட்டுக் கொடுத்துட்டாங்க.. ஒரு நாள் லேபர் அதிகாரிங்க வந்தாங்க. குழந்தை தொழிலாளரை வேலைக்கு வச்சிருக்கிறதா என் மேலே கேஸ் போட்டாங்க.. எம் புள்ளதான்னு சொன்னேன். ஆனா அவங்க கேட்கல.. நாம கஷ்டத்தை எல்லாத்தையும் சொன்னேன். கேட்கல.
இந்த சட்டத்தில உனக்கு ஒரு வருடம் வரைக்கும் ஜெயில் கிடைக்கும்ன்னு சொன்னாங்க.. அவங்கக்கிட்ட கெஞ்சினேன். இப்போ பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சிருக்காங்க.. செயிலுல்லாம் கிடையாதுன்னுட்டாங்க. கடன வாங்கி பணத்தை கட்டிட்டேன். அதனாலத்தான் டிவி கடனைக்கூட கட்டமுடியல.. சரி எப்படியும் சமாளிக்கலாம். கவலைப்படாதீங்க…
கேஸ் போடலாம்ன்னு சொன்னாங்க.. ஆனா அதுக்கு அலையணும். நடக்கிற காரியமில்ல. அதனால அபராதத்தை கட்டுறன்னு சொல்லிட்டேன். என்றான் சுப்பையா.”
“அப்பா.. சொந்த கடையில இருக்கிற நான் குழந்தை தொழிலாளின்னா… மாஸ்டர் மகிஷ் பணத்துக்கு நடிக்கிறது என்னப்பா? அவன் தொழில் செஞ்சா விருது. நான் தொழில் செஞ்சா தண்டனையா?
-கடையம் பாலன்