June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காமராஜருக்கு பெருமை சேர்த்த பாடல்

1 min read
A song that adds pride to Kamaraj

15-7-2020

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பேசும்போது சிவாஜிகணேசனையும் நினைவுகூர்வது நல்லது.
அவரின் படங்களில் சந்தர்ப்படம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜரின் பெருமைகளை சொல்லாமல் இருக்க மாட்டார். அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பலவற்றில் காமராஜரின் திறமை சொல்லப்பட்டிருக்கும். அவை எல்லாம் எடுத்துக்கட்டி புகழ் அல்ல. உண்மையின் பிரதிபலிப்பு.

எத்தனையோ பாடல்கள் காமராஜரை புகழ்ந்து வந்திருந்தாலும் இந்த பாடல் என் நெஞ்சை சுட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பட்டிக்காடா பட்டணமா என்ற படத்தில் அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடல் உண்டு.
இந்தப் பாடலில் சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி..மகராசன் வாழ்க என்று வாழ்த்துகூறி இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டையேறி.. அம்பிகையே ஈஸ்வரியே…
பள்ளிக்கூட பருவத்திலேயே என்னை இந்த அடிகள் மிகவும் கவர்ந்தது. என்னை மட்டுமல்ல காமராஜரின் தொண்டர்கள் அனைவரையும் புத்துணர்ச்சி ஊட்டியது இந்தப்பாடல்.
சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலமுண்டு முத்துமாரி… உயிரோட்டமுள்ள இந்த வரிகள் வரிகள் உயிர் பெறாமல் போய்விட்டதோ என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்துவந்தது.
இப்போதுதான் அந்த வரி எவ்வளவு உயிர்பித்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். பெருந்தலைவருக்காக எழுதப்பட்ட அடிகள் அவை. எப்படியும் காமராஜர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று அவரது தொண்டர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கர்ம வீரரை காலன் களவாடிச் சென்றுவிட்டான். கவிஞரின் சொல்லும் கலைஞனின் காட்சியும் பொய்யாகி விட்டதே என்று கவலை கொண்டிருந்தேன். அட மடையா அது பொய்யல்ல என்பதை இப்போது காலம் உணர்த்திவிட்டது.
காமராஜரின் ஆட்சி காலம் ஒரு பொற்காலம் என்பதை இன்றைய இளைஞர்களும் புரிந்து கொண்டார்கள். ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியவன் அல்ல… வாழ்ந்து காட்டியவன். அந்த தலைவன். அரசியல் அகராதி. எல்லா சாமானியனும் காமராஜர் ஆட்சி போல் மீண்டும் வராதா என ஏங்கிக் கொண்டிருக்கிறான். எந்த ஆட்சி தவறுகளுக்கும் காமராஜரின் ஆட்சி காலத்தை ஒப்பிட்டு இந்த தவறை இப்படி தவிர்த்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். அவர் தேர்தலில் தோல்வி அடைந்தாரே தவிர அவர் தேர்ந்தெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் எதுவும் தோல்வி அடையவில்லை. பெரிய பெரிய தலைவர்களெல்லாம் விமர்சனத்துக்குள்ளாகும் இந்த காலத்தில் விமர்சனத்துக்கு அப்பால் ஆகிவிட்டார். அவர் மறைந்தாலும் அரசியல் தலைவராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நாட்டுப்பற்றுள்ள அனைவரின் இதய சிம்மாசனத்திலும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார். கோட்டைக்குச் செல்லும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் காமராஜர் இருந்த இருக்கையா, அவர் நல்லபல திட்டங்களை தீட்டிய இடமா என்று போற்றி புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.
இப்போது சொல்லுங்கள் இது அந்த சிவகாமிச் செல்வனின் காவம்தானே. கோட்டை ஏறும் தொண்டர்களெல்லாம் அவரை போற்றி புகழ்ந்த வண்ணம்தானே உள்ளனர். கவிஞனின் வார்த்தையும் பொய்க்கவில்லை. வாழ்த்திய கலைஞன் கணேசனின் வாக்கும் பொய்க்கவில்லை. கடையம் பாலன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.