கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்களுக்கு ரஜினிகாந்த் கண்டனம்
1 min read
Rajinikanth condemns those who despised the “Kandasashti kavsam”
22-7-2020
கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கந்தசஷ்டி கவசம்
கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியும் இழிவு படுத்தியும் வீடியோ வெளியிட்டனர். இதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாரதீய ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். சென்னை தி.நகரில் உள்ள அர்களது அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர்கள் வெளியிட்ட 50 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டது.
ரஜினிகாந்த் கண்டனம்
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை நடிகர் ரஜினிகாந்த் ஏன் கண்டிக்கவில்லை என்று சிலர் கூறியிருந்தார்கள். இப்போது அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.