June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தங்கம் கடத்தலில் இந்தியா முதலிடம்; அதிர்ச்சி தகவல்கள்

1 min read
India tops in gold smuggling; What is the reason?

23-7-2020

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இதுவரையிலான தங்க கடத்தல்களில் வெளிநாட்டு தூதரகங்கள் சம்பந்தப்பட்டது இல்லை. பொதுவாக தூதரகத்திற்கு அனுப்பப்படும் பார்சல்களை மரியாதை நிமித்தமாக விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. இந்த காரணத்தை பயன்படுத்திதான் கடத்தல் வலை பின்னப்பட்டுள்ளது.

அதிலும் ஒரு தங்க கடத்தலில் தூதரக அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளதும், முதல்-மந்திரியின் செயலாளராக இருப்பவர் சம்பந்தப்பட்டுள்ளதும் இதுதான் முதல் சம்பவமாகும்.
இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக ஒரு பெண் இருப்பதும் அனைவரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

சினிமா நடிகையை போன்ற தோற்றம். சிறப்பான பேச்சாற்றல். நுட்பமான மதிநுட்பம்- இவைதான் ஸ்வப்னா சுரேஷ் என்ற அழகு பதுமையின் அடையாளம்.
முதலில் இவர் வேலை பார்த்தது சில தனியார் நிறுவனங்களில்தான். அங்கும் மேல்மட்டத்தில் இருப்பவர்களை எளிதில் வளைத்து பிடித்து தன் இஷ்டம் போல ஆட்டி வைத்துள்ளார்.

அவரது குறுக்குவழி முயற்சிகளுக்கு தடை போடும் நேர்மையான ஆண்களின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தி பழிவாங்கியும் உள்ளார். இதில் கடைசியில் உண்மை வெளிப்பட்டு, ஸ்வப்னாவை போலீசார் எச்சரித்து விட்டதும் உண்டாம்.

ஆனால் இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஸ்வப்னா மீது கோர்ட்டில் தொடுத்த வழக்கு தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவைக் கூட அலட்சியப்படுத்தி ஸ்வப்னா மீது குற்றவியல் விசாரணை நடத்தாமல் விட்ட போலீஸ் உயரதிகாரிகள் தற்போது தேசிய புலனாய்வு விசாரணை முகமையின் விசாரணை வளையத்தில் வந்துள்ளனர்
.

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி வெளியேறிய ஸ்வப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி, கேரள முதல்-மந்திரியின் செயலாளர் சிவசங்கர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோர்கள் மட்டுமின்றி, சுமார் 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்க கடத்தல் கும்பல்களுடனும், தங்க வியாபாரிகளுடனும் தொடர்பு வைத்து கொண்டு வெற்றிகரமாக இதுநாள் வரையிலும் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்தடுத்து பலர் இதில் கைது செய்யப்பட்டு பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவை எல்லாம் சிலர் கைதானவர்களால் வெளிவந்த தகவல்தான். இந்த விசயத்தில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் கடத்தல்கள்தான் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

தங்க கடத்தல்களில் உலகத்திலேயே அதிகம் சம்பந்தப்பட்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வரையிலும் ஆண்டுக்கு 150 டன்கள் முதல் 200 டன்கள் வரை இந்தியாவிற்குள் தங்கம் கடத்தி வரப்பட்டது. ஆனால் தற்போதோ 300 முதல் 400 டன்கள் வரை தங்கம் கடத்தப்படுகிறது.
இவ்வாறு தங்கம் கடத்தப்படுவதை உலக தங்க கவுன்சிலே பலமுறை சுட்டிக் காண்பித்துள்ளது.

தங்க கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது குறித்த கவலையை இந்திய நகை விற்பனை கழக தலைவர் அனந்த பத்மநாபனும் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்.
தங்க கடத்தல் தொடர்பாக இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 350 முதல் 400 பேர் வரை கைது செய்யப்பட்டாலும், தங்க கடத்தல் குறைந்தபாடில்லை. உண்மையில் கடத்தலில் ஈடுபடுபவர்களில் பத்தில் ஒருவரே கைதாகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தளவுக்கு தங்க கடத்தல் உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. அரபு நாடுகள், தைவான், சீனா, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்துதான் அதிக தங்கம் சட்டவிரோதமாக வருகிறது.

வான் வழி, தரை வழி, கடல் வழி ஆகிய 3 மார்க்கமாகவும் தங்க கடத்தல் நடக்கின்றன. சர்வதேச மாபியா கும்பல்கள், நகை வியாபாரிகள், அரசு அதிகாரிகள், வேலையில்லா ஏழை இளைஞர்கள் ஆகியோர் வலைபின்னலுடன் இது அரங்கேறி வருகிறது.

குருவிகள்-கொக்குகள்

இதில் கடத்தி வருபவர்களை குருவிகள் என்றும், ஏஜெண்டுகளை கொக்குகள் என்றும் அழைக்கிறர்கள்.

கடத்தப்படும் வழிமுறைகள் சில சமயங்களில் பெரும் ஆச்சரியத்தைத் தருவதுண்டு.
தலையில் சிகை அலங்காரத்தின் ஊடாக மறைத்து கடத்துவது, காலில் அணியும் ஷூவுக்குள் ஒளித்து எடுத்து வருவது, சூட்கேசை உட்புறமாக கிழித்து உள்ளே வைத்து ஸ்பான்ச் வைத்து தெரியாமல் தைத்து வருவது, உள்ளாடைகளுக்குள் ஒளித்து வைப்பது, கட்டிங் பிளேயருக்குள் மறைப்பது, டார்ச் லைட்டிலும், செல்போனிலும் பேட்டரிக்கு பதிலாக வைப்பது, கன்டெய்னரில் வீட்டு உபயோக பொருட்களுக்குள் வைத்துக்கொண்டு வருவது என ஏகப்பட்ட வழிமுறைகளை செய்கிறார்கள்.

இதில் எல்லாவற்றையும் விட மோசமானது மட்டுமல்ல, கொடுமையானது ஆசனவாயில் நுழைத்து வைத்து கொண்டு வருவது. இதில்தான் வேலையற்ற ஏழை இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இப்படி எடுத்து வருவது மரண அவஸ்தை தருவதாகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த தங்கத்தை எடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விபரீத வழிமுறை இது.

கடத்தலுக்கு காரணம்

இந்தியாவில் தங்கம் ஏன் அதிகமாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்தியாவில்தான் தங்கத்திற்கு மிக அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. முதலில் இறக்குமதி வரி இல்லாதிருந்தது. பிறகு அது ஒரே ஒரு சதவீதமாக்கப்பட்டது. இந்த நிலை 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது 2 சதவீதமாக்கப்பட்டது. அதே ஆண்டு மறுமுறை ஏப்ரலில் இது 4 சதவீதமானது

இப்படியே அதிகரிக்க தொடங்கி தற்போது 12.5 சதவீதமாக தங்கத்துக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இத்துடன் கடைகளில் நகை விற்கும்போது ஜி.எஸ்.டி. 3 சதவீதமும், மேலும் சில வரிகளும் சேர்த்து விதிக்கும்போது பெரும் சுமையாகிறது. தற்போது 10 பவுன் நகை வாங்கினால் சுமார் ரூ.58 ஆயிரத்து 500 வரியாக விதிக்கப்படுகிறது.
நகை வாங்கும்போது வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், வாடிக்கையாளர்களும் பில் இல்லாமலே நகையை வாங்க விரும்புகின்றனர். இதேபோன்று வியாபாரிகளும் வரிவிதிப்பு இல்லாமல் கிடைக்கும் தங்கத்தை பெற தயங்குவது இல்லை

.
இன்றைய நிலவரப்படி உலகில் 90 சதவீத நாடுகளில் தங்க இறக்குமதிக்கு வரிகள் கிடையாது. ஆனால் அதிக ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்து மக்களும் கூட வாங்கிப் பயன்படுத்தும் தங்கத்திற்கு மிக அதிகமான வரிவிதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.

பொதுவாக உலகில் அதிகமாக தங்க பயன்பாடு உள்ள நாடு இந்தியாதான். இந்திய மக்களின் இல்லங்களில் ஆபரணங்களாக, நாணயங்களாக இருக்கும் தங்கத்தின் அளவு மட்டுமே சுமார் 28 ஆயிரம் டன்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் அறக்கட்டளைகள், மத நிறுவனங்களிடம் இருக்கும் தங்கம் அளவு சேர்க்கப்படவில்லை.
இந்தியாவில் ஆண்டுக்கு 1½ கோடி திருமணங்கள் நடக்கின்றன. சுமார் 70 சதவீத திருமணங்கள் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்து திருமணங்களேயாகும்

தாலிக்கு குண்டுமணி அளவாவது தங்கமின்றி திருமணங்கள் நடப்பதில்லை. மேலும் அறுவடை முடிந்து கைக்கு காசு வந்தால் விவசாயிகள் கூட ஏதோ ஒரு நகையை வாங்கிவிடுவர். நகையில் செய்யும் முதலீட்டை ஒரு சேமிப்பாகவும், அவசர காலத்தில் அடகு வைத்து கடன்பெற வசதியாகவும் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்

. இப்படிப்பட்ட நிலையில் அடிக்கடி எகிறும் தங்கத்தின் விலையும், அதீத வரிவிதிப்பும் இந்திய மக்களுக்கு குறிப்பாக தங்கத்தை அதிகம் நேசிக்கும் தமிழக மக்களுக்கு ஒரு பெரும் சுமையாகத்தான் உள்ளது. ஆகவேதான் பொருளாதார வல்லுனர்கள் தங்க கடத்தலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், அதீத வரிவிதிப்பை தவிர்க்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.