கூலித் தொழிலாளியின் விரல்நுனியில் திருக்குறள்
1 min read
The mercenary who knew the whole of Thirukkural
23/7/2020
உலகத் திருமறையான திருக்குறள் முழுமையாக படித்தவர்கள் மிக குறைவுதான். பள்ளிக்குழந்தைகள் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக படித்து சாதனை புரிந்ததாக அறிந்திருப்போம். அஷ்டாவதானி போன்ற சிந்தனையாளர்கள் சிலர் திருக்குறள் அனைத்தையும் உள்வாங்கி இருப்பார்கள்.
ஆனால் ஒரு கூலித்தொழிலாளி திருக்குறளை விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்றால் அவர் ஓர் அதிசய மனிதர்தானே. அது மட்டுமா? அனைத்து திருக்குறளின் பொருளையும் கூறுவதோடு அதை நடைமுறை சம்பவத்தோடு விளக்கவும் செய்கிறார். வரிசை எண்ணைக் குறிப்பிட்டால் திருக்குறளை உடனே சொல்லிவிடுகிறார். அதிகாரத்தின் பெயரையும் அந்த சிறப்பையும் விளக்குகிறார். அகர வரிசையிலும் திருக்குறளை சொல்லி நம்மை வியக்க வைக்கிறார். குறிப்பறிதல் என்ற தலைப்பில் இரண்டு அதிகாரம் இருப்பதையும் அதில் ஒன்று பொருட்பாலிலும் இன்னொன்று இன்பத்துப் பாலிலும் வருவதாக கூறினார்.
இந்த திறமைக்கு சொந்தக்காரர் சீனிவாசன். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாய் சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவர் வசதிப்படைத்தவர் அல்ல. அப்படி ஒன்றும் படிப்பில் கெட்டிக்காரர் இல்லை. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத அவர் மீண்டும் கஷ்டப்பட்டு எழுதிதான் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பெற்றார். அப்படி படிப்பே வராத அவர் திருக்குறள் அனைத்தையும் தன்னுள் புகுத்தி சிறைபிடித்து வைத்திருப்பது எப்படி?
அவரது வாழ்கையை கொஞ்சம் அறிந்து கொண்டால் அவரைப்பற்றிய கேள்விக்குறி ஆச்சரியக்குறியாக உங்களுக்குள் மாறும்.
சீனிவாசனுக்கு இப்போது வயது 49. தந்தை மாரியப்பன். தாயார் பேச்சியம்மாள். அவர்கள் இருவரும் அமரத்துவம் பெற்றுவிட்டார்கள்.
மனைவி பெயர் ஜோதி. பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்களை முப்பெரும் தேவியராய் கருதி அன்போடு வளர்த்து வருகிறார். மூத்தமகள் என்ஜினீயரிங் படித்துள்ளார். 2-வது மகள் பி.காம். முதலாம் ஆண்டு. மூன்றாவது மகள் பல்மருத்துவம் படிக்கிறார்.
சீனிவாசன் பள்ளிப்படிப்பை 1987ம் ஆண்டு முடித்தார். தன்னால் படிப்பில் சாதிக்க முடியவில்லை… படிப்பு தேவையில்லாத சினிமாவில் சாதிக்கலாம் என்ற எண்ணம் அவருக்குள் உதயமானது. சினிமா ஆசையில் சென்னைக்குச் சென்றார். அங்கு சென்று எப்படியும் நகைச்சுவை நடிகராகிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டினார். அதற்காக அருணா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு முதலில் டீ, காபி வாங்கி கொடுக்கும் வேலை செய்தார். பின்னர் ஆபீஸ் பையனாக இருந்தார். சினிமாவில் தலைகாட்டும் வாய்ப்புத்தான் கிடைத்ததே தவிர நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆம் கூட்டத்தோடு கூட்டமாக சில படங்களில் வந்து சென்றுள்ளார்.
“ஏன் உங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லையா?” என்று கேட்டால்… “எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஒரு திறமையும் இல்லை. அப்படி இருக்கும்போது பிறரை குறை சொல்லுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்கிறார் அடக்கத்தோடு.
சுமார் 10 ஆண்டு சென்னையில் இருந்த அவருக்கு இனி சினிமாவை எட்டிப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் சொந்த ஊருக்கே வந்துவிட்டார்.
அதன்பின்னர் சிவகாசியில் பிரபல அய்யனார் சுவீட் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். 27-வது வயதில் பெற்றோர் திருமணத்தை முடித்து வைத்துவிட்டார்கள்.
அப்போதுதான் அவர் நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தார். திருக்குறளை படித்துப் பார்த்தால் என்னவென்று சிந்தித்தார். பள்ளிக்கூடத்தில் ஒரு பாட்டைக்கூட மனப்பாடம் செய்ய முடியாத தன்னால் 27 வயதுக்குப் பிறகு முடியுமா என்று அவர் சிந்திக்க வில்லை. முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் காரியத்தில் இறங்கினார்.
இதற்காக 10 ரூபாய்க்கு விற்கும் திருக்குறள் புத்தகத்தை வாங்கி படித்தார்.
அப்போதுதான் பிரச்சினைகள் வரத் தொடங்கியது. பத்து மணி நேரம் வேலை. பின்னர் வீட்டுக்கு வந்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். படிக்க ஏது நேரம்? கடையில் வேலை பார்த்து சாப்பிடும் நேரத்திலும் வீட்டில் ஓய்வு கிடைக்கும்போது படிக்க ஆரம்பித்தார். வேலை பார்க்கும் இடத்தில் படித்தால் மற்ற தொழிலாளிகள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். வீட்டில் வந்து படித்தால், “குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில் படிப்பு என்ன வேண்டிக்கிடக்கு இதைப் படிச்சி என்ன கிழிக்க போறீங்க” என்ற வசை மனையிடம் இருந்து வரும்.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பார். இதனால் மனைவியின் கோபத்துக்கு திருக்குறள் புத்தகம் ஆளாகும். இப்படி பத்து புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டு உள்ளன.
ஆனாலும் புதுப்புது புத்தகங்கள் வாங்கி திருக்குறளை மனப்பாடம் செய்தார்.
இப்போது இவர் 1330 குறளையும் 38 நிமிடத்தில் ஒப்புவித்துவிடுவார். அதேபோல் அகர வரிசையில் அனைத்து குறள்களையும் கூறிவிடுவார். அகர வரிசையில் பாடலில் இரண்டு வார்த்தைகளை மட்டும் சொல்லிக்கொண்டே போவார். அப்படி அனைத்து பாடல்களையும் 10 நிமிடத்தில் சொல்லிவிடுவார்.
இவரது சாதனையை பாராட்டி டிரம்ப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் கொடுத்து உள்ளது.
இவர் திருக்குறளை படிப்பதோடு நின்றுவிடவில்லை. “நல்வாழ்க்கை பாதை” என்ற கடந்த 2008-ம் ஆண்டு வெளியிட்டார். இதில் இவரது வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமின்றி நல்வாழ்வு வாழ்வதற்கான ஆலோசனைகளும் இடம்பெற்று உள்ளன.
இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட இவருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. ஆனால் ஒரு புத்தகத்தைக் கூட விலைக்கு விற்க முடியவில்லை. அன்பர் ஒருவர் ஆயிரம் புத்தகத்தை விலைக்கு வாங்கி அதை தங்கள் இல்ல திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இப்படி சாதனை படைத்தாலும் வேலையிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஆரம்பத்தில் சுவீட் கடையில் பொட்டலம் போட்டு வந்த இவர் தற்போது பலகாரம் செய்யும் மாஸ்டராக இருக்கிறார்.
இவர் ஓய்வு நேரத்தில் திருக்குறள் படித்ததோடு.. தனியாக சிறுசிறு வியாபாரமும் செய்துள்ளார். அதாவது வடை சமோசா, சுண்டல், போளி, பலகாரம், இயற்கை உணவகம், கருவேப்பிலை சாறு, நெல்லிக்கா, பீட்ரூட் சாறு போன்றவை தயாரித்து விற்பனை செய்துள்ளார். ஆனால் இந்த தொழில்கள் எல்லாம் அவருக்கு சோபிக்கவில்லை. ஆனால் அவரிடம் இந்த தொழிலை கற்றவர்கள் இன்று பிரபலமாக விளங்குகிறார்களாம்.
இவர் திருக்குறள் சாதனையைப் பற்றி கூறுகிறார்..
சரியாக பள்ளிப்படிப்பை படிக்காத என்னாலேயே இத்தனை குறளை படிக்க முடிந்திருகிறது, என்றால் யாரும் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. மாணவ-மாணவிகள் எது படித்தாலும் திருக்குறளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரண தொழிலாளியான நான் செய்த இந்த சாதனை நாலு பேருக்கு தெரிய வேண்டும், அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது விருப்பம்.
நான் இந்த சாதனை செய்ய எடுத்துக் கொண்ட முயற்சியால் என்குடும்பத்திற்கு எந்த குறையும் வைக்கவில்லை. யார் உதவியும் நாடாமல் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையும் அமைத்து கொடுத்துவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனிவாசன் சொல்வது உண்மைதான்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.”
என்ற குறளின் வடிவமாக சீனிவாசன் வாழ்கிறார்
மேலும் சீனிவாசனை பார்க்கும்போது மற்றவர்களுக்கும் முயற்சியின் மீது நம்பிக்கை பிறக்கும். அதாவது
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”.
((இது நம்மால் முடியுமா என மலைத்துப்போகாமல் (அசாவாமை) முயற்சி மேற்கொண்டால் பெருமை தானாக வரும்))
என்ற குறளும் நினைவுக்கு வருகிறது.
அவரது திறமை குடத்திலிட்ட விளக்காகத்தான் இருக்கிறது. அவரைப்பற்றி சிவகாசியில் கூட யாருக்கும் தெரியவில்லை. அவரது திறமையை போற்றுவோம்.
சீனிவாசன் கைபேசி எண்- 90475 11331
-கட்டுரையாளர் கடையம் பாலன்