சமூக வலைதளங்களில் ஆபாசம் புகுந்துவிட்டது; தணிக்கை செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
1 min read
Pornography has infiltrated social networking sites; Case high court seeking audit
6-8-2020
சமூக வலைதளங்களில் ஆபாசம் புகுந்துவிட்டது என்றும் எனேவே அதற்கு தணிக்கை செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் கே.சுதன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
யு டியூப் சேனல்கள்
சமூக வலை தளங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். 1500க்கும் மேற்பட்ட யு டியூப் சேனல்கள் உள்ளன. ‘டுவிட்டர்’ மற்றும் முகநூல் பயன்பாடும் அதிகமாக உள்ளன.
இவற்றில் ஏராளமான தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் வருகின்றன. யு டியூப்பில் சொந்தமாக சேனல் தொடங்கி வீடியோ புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.
ஆபாச பதிவுகள்
இவ்வாறு சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளுக்கு என எந்த கட்டுப்பாடும் தணிக்கையும் கிடையாது; எந்த வரைமுறையும் இல்லை. இதனால் தேவையற்ற பதிவுகள் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆபாச பதிவுகளால் இளைய சமூகத்தினர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தணிக்கையின்றி வீடியோ புகைப்படம் தகவல்களை பதிவேற்றம்செய்வதால் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
நடிகை வனிதா திருமண பதிவு அதைத்தொடர்ந்து பிரபலங்களுக்கு இடையே நடந்த மோதல் ஒருவருக்கு ஒருவர் அசிங்கமாக திட்டிக் கொண்டது போன்ற பதிவுகளை 10 லட்சத்துக்கும் மேல் பார்த்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்கள் தலைவர்களை எல்லாம் தவறாகசித்தரித்து பதிவேற்றம் செய்கின்றனர்.சிறு கதை என்ற தலைப்பில் ஆபாச வீடியோ பதிவேற்றப்படுகிறது.
இப்படி ‘ஆன்லைன்’ நடைமுறையை பயன்படுத்தி விளம்பரங்களை சேகரித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களின் நோக்கம். இளைஞர்கள் மாணவர்களின் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
தணிக்கை
இதை ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு வேண்டும்.எனவே திரைப்படங்களை தணிக்கை செய்ய மத்திய வாரியம் இருப்பது போல சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் காட்சி களை தணிக்கை செய்ய வாரியம் அல்லது ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை புதிதாக யு டியூப் சேனல் துவங்கவோ இருப்பதை பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரவு
மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.