தமிழகத்திற்கு மேலும் 16 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள்
1 min read
16 lakh more corona test equipment for Tamil Nadu
13-8-2020
சென்னை : கொரோனா பரிசோதனை செய்ய, தமிழக அரசு கூடுதலாக, 15 லட்சத்து 80 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகளை கொள்முதல் செய்ய உள்ளது.
கொரோனா பரிசோதனை கருவிகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அது குறைந்தபாடில்லை. சென்னையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், நாள்தோறு 60 முதல் 70 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில், சென்னையில் மட்டும் 12 முதல் 14 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இது வரை, 33 லட்சத்து 60 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் கருவிகள்
கொரோனா சோதனைக்காக, தமிழக அரசு தொடர்ந்து, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது.
முதல் கட்டமாக, தென்கொரியா நிறுவனத்திடமிருந்து, 25 லட்சம் கருவிகள் வாங்க, ஜூலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், தென்கொரியாவில் இருந்து, 7 லட்சமும், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து தலா ஒரு லட்சமும்; இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவிகள் ஒரு லட்சமும் வாங்கி இருக்கிறது.
இந்த நிலையில், கூடுதலாக, 15 லட்சத்து 80 ஆயிரம் கருவிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இதன்படி, தென்கொரியாவில் இருந்து 12 லட்சம் கருவிகளும் அமெரிக்காவில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கருவிகளும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து தலா ஒரு லட்சம் கருவிகளும், இந்திய நிறுவனத்திடம் இருந்து 50 ஆயிரம் கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, 3 லட்சத்து 72 ஆயிரம் கருவிகள், தமிழகத்திற்கு வந்துள்ளன. மீதமுள்ள கருவிகள், மூன்று வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழக அரசிடம் தற்போது 7லட்சத்து 45 ஆயிரம் கருவிகள் உள்ளதாக தமிழக மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.