வடிவுக்கு கிடைத்த பிச்சை- சிறுகதை
1 min read
Vadiyukku kidaitha pichai short stroy bY Disco Selvaraj
13-8-2020
வடிவு-பெயர் மட்டுமல்ல உருவத்திலும், அழகானவடிவுதான். நிறைமாத கர்ப்பிணி. பிளாட்பாரத்தில் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனக்கு மட்டுமல்ல…. தனது வயிற்றில் வளரும் பிஞ்சுவுக்கும்தான்.
அவ்வழியே செல்லும் செல்வந்தர்கள் சிலர் அவளைப் பார்த்து சிரித்தனர். உள்ளத்தில் செல்வம் படைத்தவர்கள் அவளுக்குப் பிச்சை போட்டார்கள். சிலர் அவள் அழகை ரசித்தார்கள்.
ஆனால் பரசுராமின் பார்வை தனி ரகம். அவன் பெரும் பணக்காரன். அவன் வடிவு கர்ப்பம் ஆகும் முன்பே அவளை நோட்டமிடுவான். ஒருநாள் தன்னோடு வரமுடியாமா என்று கேட்க வடிவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என்னை அந்த மாதிரி ஆள்ன்னு நினைக்காதீங்க என்று கூறி பரசுராமை பேசவிடாமல் விரட்டினாள்
மாரி காலம் அது. வடிவுக்கு பிரசவ வலி உண்டாயிற்று. ஐயோ… வயிறு வலிக்குது… யாரோவது உதவி பண்ணுங்க…
உதவிக்கு சில பிச்சைக்காரிகள் ஓடோடி ஓட்டை எறிந்துவிட்டு வந்தனர். சோவென்று மழை பெய்து கொண்டிருந்தது. வடிவுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மழை நீர் அவனை கழுவி சுத்தமாக்கிற்று. மாரி காலத்தில் பிறந்ததால், அவனுக்கு மாரிமுத்து என்று பெயர் சூட்டினர்.
அவ்வழியே மார்க்கெட்டுக்கு போயிட்டு வரும் பரசுராம் என்ற செல்வந்தன்… இதையெல்லாம் படம் பிடிப்பதைப்போல் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மறு நாள் பரசுராம் வடிவு அருகில் சென்றான்.
“வடிவு நீ ரொம்ப அழகா இருக்க.. நீ என்கூட மாத்திரம் வந்துவிடு… நான் உன்னை நல்லா வாழ வைக்கிறேன்.. வருகிறாயா?” என்று மீண்டும் கேட்டான்.
வடிவு அழ ஆரம்பித்தாள்…
“இவன் அப்பன் இருந்தா.. இப்படி கூப்பிடுவீங்களா? என்ன துணிச்சல் உங்களுக்கு” என்றாள் வடிவு ஆவேசமாக.
“நீ அழகு மட்டும் உள்ளவள் அல்ல. தன்மானம் உள்ளவள். நீ பி்ச்சை எடுக்க வேண்டாம். என்னோடு என் வீட்டுக்கு வந்துவிடு.. உன்னை எப்படி வைக்கிறேன் பார்” என்றான் பரசுராம்
. அப்போது அருகில் இன்னொரு பிச்சைக்காரி கண்ணம்மா குறுக்கிட்டாள்…
“பாவி மவளே பிச்சை எடுத்து பிள்ளைய பிழைக்க வைக்க முடியுமா? பிள்ளைக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியம். நீ நல்லா சாப்பிட்டாத்தானே தாய்பால் சுரக்கும். பிள்ளை பசியாறும்.பேசமாக அந்த அய்யாக்கூடுபோயிடு… உனக்கும் நல்லது. உன் பிள்ளைக்கும் நல்லது.”
“காமுகன் கூட போகச் சொல்கிறாயே கண்ணம்மா..”
பரசுராம், “வடிவு முதலில் உன் குடிசைக்குப்போ. பச்சை உடம்பு தேறட்டும். நான் மூணு மாதங்கள் கழித்து உன்னை வந்து பார்க்கிறேன். அதுவரைக்கும் இதோ பத்தாயிரம் ரூபாய். நல்லா சாப்பிட்டு ஓய்வு எடு.”
மூன்று மாதங்கள் கழித்து…
பரசுராம் வடிவை பார்க்கிறான். கனிந்த மொழியில் வடிவு வாங்க என்று சொல்லி குடிசைக்குள் வரவேற்றாள்.
“பேசமாக நீ என் வீட்டுக்கு புறப்படு” என்றான் பரசுராம்.
ஆசையோடு அவனோடு புறப்பட்டாள்.
“வடிவு நாம் முதலில் போவது எங்க ரெஸ்ட ஹவுஸ் தான்… அங்கேதான் உன் வாழ்வு மலரப்போகிறது.”
ரெஸ்ட் ஹவுசுக்குள் மூவரும் நுழைகின்றனர்.
வடிவு முகம் சற்றே வாடிற்று. என்ன செய்யப்போறாரோ என்று…
வடிவு இப்பம் பார் “தேன்மொழி… தேன்மொழி” என்று கூப்பிட்டான் பரசுராம்
கையில் ஒரு பெண் குழந்தையுடன் உள்ளே புகுந்தாள் பரசுராம் மனைவி தேன்மொழி.
“இது யாருங்க..?” என்று கேட்டாள் வடிவு
“இது என் மனைவி. என்னை நீ தவறாக புரிந்து இருப்பாய். வடிவு உன் வாழ்வு மலர வேண்டும். உன் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கணும் என்று ஆசைப்பட்டேன். நான் இப்போது உனக்கு ஒருத்தரை அறிமுகம் செய்து வைக்கிறேன் பார்.
முருகா… முருகா… முருகன் மிகவும் நல்லவன்.”
“ஐயா கூப்பிட்டிங்களா” வந்து நின்றான் முருகன்.
“வடிவு, என் திட்டம், உன்னை முருகனுக்கு மறுமணம் செய்து வகை்க வேண்டும். துணை இல்லாமல் துளியளவும் வாழ்வது கஷ்டம். உனக்கு மகனுக்கும் நல்ல தகப்பன் கிடைத்துவிடுவான். முருகன் பேருக்கேற்ற அழகு. நீங்க ரெண்டு பேரும் என் வீட்டிலேயே வேலை பார்க்கலாம்.”
வடிவுக்கு பரசுராம் கடவுளாக காட்சி அளித்தான்.
முருகன்-வடிவு கல்யாணம் முடிந்தது. இருவரும் பரசுராம் ரெஸ்ட் ஹவுசிலேயோ வாழ்க்கையை தொடங்கினர்.
வடிவு என்ற பிச்சைக்காரிக்கு பரசுராம் வாழ்க்கை எனும் பிச்சைப் போடவில்லை. நல்லுள்ளம் நன்மை செய்திற்று.
-கதை எழுதியவர் டிஸ்கோ செல்வராஜ், கடையம்