எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது இல்லை; போலீஸ் உறுதி
1 min readNo arrest if SV Sehgar apologizes; Police confirmed at High court
28-8-2020
தேசியக் கொடியை அவமதித்ததற்காக கோர்ட்டில் மன்னிப்பு கோரினால் நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
சிலைக்கு காவி
கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அதேபோல் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. இந்த சம்பவங்கள் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறும்போது, “தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் பதில் அளிக்கும்விதத்தில், “காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் முதல்-அமைச்சர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா?
” என பேசி வீடியோ வெளியிட்டார்.
எஸ்.வி.சேகர் மீது புகார்
தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் பதிலளிக்க போலீசாருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், தனது மனுதாரர் கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், போலீசார் 4 பக்க கேள்விகளைக் கொடுத்துப் பதிலளிக்கக் கூறியிருந்ததனர், அவற்றிற்கு இன்று ஆஜராகி அளித்துள்ளார் . அந்தப் படிவத்தை தாக்கல் செய்து, கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மன்னிப்பு
சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், “தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும். நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை” என்றும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, இது குறித்து, மனுதாரர், தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை வருகிற (செப்டம்பர்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.