எச்.வசந்தகுமார் உடல் சத்திய மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?
1 min readWhy was H. Vasanthakumar’s body not taken to Satyamurthy Bhavan?
29-8-2020
மரணம் அடைந்த எச்.வசந்தகுமார் உடல் சத்திய மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அங்கு கொண்டு செல்லாமல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
எச்.வசந்தகுமார் மரணம்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான எச்.வசந்தகுமார் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
சத்தியமூர்த்தி பவன்
பின்னர் வசந்தகுமார் உடல் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு சென்னை தியாராய நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று(சனிக்கிழமை) காலை கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உறவினர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்த குமார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் முன்பு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்படும் என்று அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஏற்கனவே கூறியபடி சத்திய மூர்த்தி பவனுக்கு உடல் கொண்டு செல்லப்படவில்லை.
எச். வசந்தகுமாரின் உடலை உடனடியாக ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பியதால், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
அதேநேரம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து எச்.வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுபற்றி எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கூறுகையில், “சொந்த ஊருக்கு நேரத்துடன் செல்ல விரும்பினோம். சொந்த ஊர் செல்ல தாமதமாகி விடக்கூடாதென உடனடியாக சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.