மாணவியின் சடலம் எரிந்த தீயில் உயிரோடு வாலிபர் இறங்கி இறந்தாரா? பரபரப்பு
1 min read
3.9.2020
Did the student go down alive and die in the fire that burned the student’s body?கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகள் நித்யஸ்ரீ(19). இவர் நர்சிங் படித்து வந்தார். இவருக்கும், இவரது இரண்டு சகோதரிகளுக்கும் ஒரே செல்போனில் ஆன்லைன் பாடம் படிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் தந்தை திட்டியதால் மனமுடைந்த நித்யஸ்ரீ எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேட்டுநன்னாவரம் கிராம சுடுகாட்டில் உடல் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவலூர் காவல் நிலையத்தில் மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகன் ராமு(20) ஐடிஐ முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததாகவும், கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை. ராமுவின் நண்பர்களிடம் விசாரித்த போது நித்யஸ்ரீ சடலம் எரிந்து கொண்டு இருந்தபோது அந்த சுடுகாடு பகுதியில் இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். எனவே தனது மகன் சடலம் நித்யஸ்ரீயின் சடலத்துடன் தீயில் கருகியதா? என்பது குறித்து சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார், மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜி, திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜி உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை நித்யஸ்ரீயின் சடலம் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று எரிந்து கிடந்த சாம்பலை கலைத்து பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் கருகிய நிலையில் கிடந்த ஒரு வாட்ச், செல்போன் உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த எலும்புகளை தடயவியல் நிபுணர் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார் கூறுகையில், சம்பவத்தன்று இரவு நித்யஸ்ரீயின் சடலம் எரிந்து கொண்டு இருந்த போது ஒரு வாலிபர் திடீரென தீயில் விழுந்ததாகவும், அலறல் சத்தம் கேட்டு அங்கு எரியூட்டும் பணியில் இருந்தவர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் இந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எரியூட்டப்பட்ட சாம்பலில் இருந்து கருகிய நிலையில் வாட்ச், செல்போன் உதிரி பாகங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். அதன் முடிவுக்கு பிறகு தீயில் கருகியது யார் என்பது தெரியவரும், இவர்கள் இருவருக்கும் காதலா? அல்லது ஒருதலை காதல்? இருந்துள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். என்றார்.
நித்யஸ்ரீயின் சடலம் எரியும் போது வாலிபர் ஒருவர் தீயில் விழுந்து கருகியதாக கூறப்படும் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.