June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கைவிடப்பட்ட கப்பலோட்டிய தமிழன்

1 min read

Abandoned V .O. Chidambaranar

5-9-2020

சுதந்தர போராட்ட வேள்வியில் தன் வாழ்வையே எரிபொருளாக வைத்தவர்கள் பலர். மகாகவி பாரதியாரை அவர் இருக்கும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கண்ணீர் வடிக்கிறோம். அதேபோன்ற தியாகத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதவர் வ.உ.சிதம்பரானர். கைவிடப்பட்ட அந்த கப்பலோட்டிய தமிழனின் தியாகத்தை அவரது பிறந்த நாளான இன்று இங்கே நினைவுகூர்கிறார் மதுரை கவிஞர் பி.முருகேசன்.

” சொந்த நாட்டினில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? தெய்வம்- பார்க்குமோ?”

தமிழகத்தின் முதன்மையான நாட்டுப்பற்றாளரான வ.உ.சிதம்பரனார், கவிராயர் குடும்பத்தில் பிறந்தவர். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதே வ.உ.சி.யின் சுருக்கத்தின் விரிவாக்கம். ஒருசிலர் வட்டானம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பார்கள். வட்டானம் என்பது வ.உ.சி.யின் சொந்த ஊர். இது ஒட்டப்பிடாரம் அருகே உள்ளது.

வள்ளியப்பன்- தாத்தா; உலகநாதன்-தந்தை.. இந்த இருவரின் பெயர்களின் முதல் எழுத்துக்களையே சிதம்பரனார் தம் பெயரில் முன்எழுத்துக்களாய் கொண்டுள்ளார்.
வழக்கறிஞராய் வாழ்க்கையைத் தொடங்கி, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்.

ஆங்கிலேயனை விரட்டியடிக்க சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி நடத்தி சுதேசிக் கொடியை உயர்த்தி பிடித்த செம்மல் அவர்.
தேசியக் கவி பாரதியார், வ.வே.சுப்பிரமணிய அய்யர், வீரத் துறவி சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து விடுதலை வேள்வியை நடத்திய தென்னாட்டு திலகர் வ.உ.சிதம்பரனார்.
இரணியன்போல், அரசாண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்கள், வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். வெஞ்சிறையில் அவர் செக்கிழுத்தார். கல் உடைத்தார். செக்கிழுப்பதைக் கண்ட ஆங்கிலேய சிறைக் காவலாளி சிதம்பரனாரைப் பார்த்து, “செக்கு இழுக்கிறாயே எப்படி இருக்கிறது?”எனக் கேட்டான்.
அதற்கு கப்பலோட்டிய தமிழர், “நான் என் நாட்டில் சுதந்தர தேரை அல்லவா இழுத்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார் பெருமிதத்துடன்.

பாரதியின் புகழுரை

” வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
வருந்தலை என் கேண்மை போவேன்”
என்று கோவை சிறையில் வாடிய வ.உ.சிதம்பரனாருக்கு கடிதம் அனுப்பினார் பாரதி.


” கப்பலோட்டிய தமிழன்”, ” செக்கிழுத்த செம்மல்” என்றெல்லாம் அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் நாலரை ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை ஆனார்.
தமிழகத்தின் மன்னன் என்று பாரதியாரால் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனார் கடைசிக் காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். வீடு, சொத்துஅனைத்தையும் விற்று விட்டு வாடகை வீட்டில் குடியேறினார்.
வறுமை அவரை வாட்டியது தமது சட்டப்புத்தகத்தையே விலைக்கு விற்கும் அளவுக்கு வறுமையில் இருந்தார்.
” என்னிடம் 400 ரூபாய் மதிப்புள்ள சட்டப்புத்தகம் இருக்கிறது. அதை யாராவது வாங்க முன்வந்தால், 300 ரூபாய்க்கு தருகிறேன்” என்று விளம்பரமே செய்தார்.
பிழைப்புக்காக மண்எண்ணெய் வியாபாரமும் செய்தார்.
வாழ்ந்த காலத்தில் பாரதியாரை எப்படி தமிழகம் கவனிக்கவில்லையோ, அதேபோல வ.உ.சிதம்பரனாரையும் தமிழகம் கவனிக்க மறந்துவிட்டது.
” வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியென பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமில் வெண்
பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாட்சொல்லும் தோளும் நலிந்து”
என உ.சி.சிதம்பரனாரே தன் நிலையை பாடலாக வடித்துள்ளார்.
1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் தனது 64ஆம்

வயதில் மறைந்தார், வ.உ.சிதம்பரனார்.
விடுதலை காற்றை சுவாசிக்கும் முன்பே அவர் மறைந்தார். அப்போது அவர், ஐந்து மாத வீட்டு வாடகை பாக்கி வைத்திருந்தார். அந்த அளவுக்கு வறுமையில் வாடி உயிர்விட்டார்.
வ.உ.சிதம்பரனார் இறக்கும் தருவாயில் தேவாரம், திருவாசகம் பாடச்சொல்லி கேட்கவில்லை. பாரதியாரின் தேசப்பக்தி பாடல்களை பாடச் சொல்லி கேட்டு உயிர்நீத்த தேசப்பக்தர் அவர். மேலும் சுதந்தரத்தை காண கொடுத்து வைக்காமல் உயிர் விடுகிறோமே என்று ஊன்உருக கண்ணீர்விட்டு அடிமை இந்தியாவில் கண்மூடியவர்.
வ.உ.சிதம்பரனார் இறந்தபோது , “திருமந்திரநகர்” என்ற தூத்துக்குடி தவிர வேறெங்கும் மக்கள் துக்கம் கடைபிடிக்கவில்லை என்ற வரலாற்றை வாசிக்கும்போது நம் சுவாசமே நின்றுவிடும்போல் இருக்கிறது.


ஆனாலும் இன்று தாய் நாடு அவரை பெருமையுடன் பார்க்கிறது. பெருமையுடன் பேசுகிறது. சென்னை துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மைதானே.
ஆனாலும் அவரின் தியாகத்திற்கு இது எம்மாத்திரம்….

கப்பலோட்டிய தமிழர் தாம் நடத்திய கப்பல் நிறுவனம் நொடித்தபோது
” என் மனமும், என் உடம்பும்
என் சுகமும், என் நிலையும்
என் மனையும், என் மகவும்
என் பொருளும், என் மனமும்
குன்றிடினும் யான் குன்றேன்!”
என்று எழுதினார் உறுதி கொண்ட நெஞ்சுக்கு சொந்தக்காரர்.
வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கில அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு, அவருடைய தம்பி மீனாட்சி சுந்தரம்பிள்ளை அதிர்ச்சிக்குள்ளானார். புத்தி தடுமாறிப் பித்தராய் திரிந்து 1943-ம்ஆண்டு காலமானார்.
வாழ்க வ.உ.சிதம்பரனார் புகழ்.
“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”
(திருக்குறள்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.