கடையம் அருகே நண்பர் தற்கொலையால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு சாவு
1 min read
Groom commits suicide for friend suicide near Kadayam
8-9-2020
கடையம் அருகே நண்பர் தற்கொலை செய்த வேதனையில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நண்பர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நெல்லையப்பபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கார்த்தி (வயது 31).
இவரும் அரசலூரைச் சேர்ந்த நயினார் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இவர் வெளியூரில் தங்கி பெயிண்டிங் வேலைபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக்கு திருமணம் செய்ய நிச்சய ஏற்பாடுகள் நடந்தது. இதனால் நண்பரை பிரிய வேண்டி வரும் என்று எண்ணிய நயினார் கையை பிளேடால் கிழித்து கொண்டார். உடனே அவர் பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதமாக இறந்தார்.
விஷம் குடித்தார்
நண்பர் நயினார் இறந்த தகவல் தெரிந்ததும் புதுமாப்பிள்ளை கார்த்திக் மிகுந்த வேதனை அடைந்தார். தன் மீது உயிரை வைத்திருந்த நண்பன் இறந்தது அவர் மீளா துயரில் ஆழ்த்தியது. இதனால் தற்கொலை செய்ய கார்த்திக் முடிவு செய்தார்.
அவர் யாருக்கும் தெரியாமல் விஷத்தை குடித்துவிட்டார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் சிகிச்சை அளித்தன் காரணமாக கார்த்திக் உயிர் பிழைத்தார்.
இதனை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கார்த்திக்குக்கு திருமணம் நடந்தது.
தூக்குப்போட்டு சாவு
திருமணம் நடந்தாலும் கார்த்திக் நண்பரின் நினைவாகவே இருந்தார். கார்த்திக் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து கடையம் போலீசார் விரைந்து சென்று கார்த்தி உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நண்பர் தற்கொலை செய்து கொண்ட வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி சாவு
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே சங்கனாப்பேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
அவரது பெயர் சிவக்குமார் (வயது 50). இவர் சம்பவத்தன்று காலையில் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். நீண்டநேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் சிவக்குமார் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.