தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
1 min read
3,501 moving ration shops in Tamil Nadu; Edappadi Palanisamy started
21-9-2020
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நகரும் நியாவிலைக் கடை
கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன.
மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பயன் அடையும் வகையில் இந்த நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடங்கி வைத்தார்
இந்த நகரும் நியாயவிலை கடை வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ( திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைவார்கள்.
இதையடுத்து பொது வினியோகத் திட்டத்தில் திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும் சிசிடிவி, ஜிபிஎஸ் உடன் மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்