களக்காடு அருகே கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற முயன்ற பெண் சாவு
1 min read
woman died who tried to save a cow that fell into a well near Kalakadu
21-/9/-2020
களக்காடு அருகே கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற முயன்ற பெண் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஆனால் மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
சத்துணவு ஊழியர்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 55). இவர் ஏர்வாடியில் உள்ள பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை செய்து வந்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இவர் மாட்டை மேய்ச்ச லுக்காக நம்பிதலைவன் பட்டையம் என்ற பகுதிக்கு ஓட்டிச் சென்றார். வீடு திரும்பிய போது மாடு வேகமாக ஓடி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
சாவு
இதைப்பார்த்த சுப்பம்மாள் மாட்டை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால் அவரால் மாட்டை காப்பாற்ற முடியவில்லை. மேலும் சுப்பம்மாள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது அங்கே சுப்பம்மாள் கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். ஆனால் மாடு தண்ணீரில் நீந்தியபடி தத்தளித்துக்கொண்டிருந்தது.
தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.
இறந்த சுப்பம்மாளின் உடலையும் மீட்டனர்.
இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.