பெண்களை பற்றிய அவதூறு பேச்சு; திருமாவளவன் மீது வழக்குப்பதிவு
1 min read
Slanderous talk about women; Case against Thirumavalavan
24/10/2020
பெண்களை பற்றி அவதூறாக பேசிய திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவதூறு பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. திருமாவளவன் அவதூறாக பேசியது பற்றி பாரதீய ஜனதாவை சேர்ந்த அஸ்வத்தாமன் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு
இதனை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததன் மூலம நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குஷ்பு கண்டனம்
இந்நிலையில், சமீபத்தில் பாரதீய ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு.
கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்?
மன்னிப்பு கேட்க வேண்டும்
கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்?
இவ்வாறு குஷ்பு கூறினார்.