ஆயிரம் குறைகள் இருக்கலாம்! அரசு மருத்துவமனைகள் ஆலயங்களே…!
1 min read
Government hospitals and temples …!
7 மாத கொரோனா காலத்தில் 9,879 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்; மதுரை அரசு மருத்துவமனையின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு
கொரோனா தொற்று பரவிய கடந்த 7 மாதங்களில் 9,879 கர்ப்பிணிகளுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவித்தொடங்கியது. அப்போது முதல் தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சைகள் மறுக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையில்லாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா’ காலத்திலும் 24 மணி நேரமும் மருத்துவக்குழுவினர், சாதாரண கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமில்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கும் சிகிச்சைகள் வழங்கி, பிரசவமும் பார்த்தனர். இடையில் இரு நாட்களில் சிக்கலான 66 பிரசவங்கள் நடந்த போதுகூட அவர்கள் தாய், சேய் மரணம் ஏற்படாதவாறு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றினர். யாரும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. இவ்வாறு சிறப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை வழங்கிய மகப்பேறு துறை மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு விழா நடந்தது. ‘டீன்’ சங்குமணி கலந்து கொண்டு அவர்களை பாராட்டிப்பேசினார். அவர் பேசியதாவது:-
‘‘மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு துறையில் கடந்த 7 மாதங்களாக 9, 879 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணி பெண்களும் அடங்குவர்.
கடந்த ஆண்டு (2019) இதே காலத்தில் 8,408 பிரசவங்கள் நடந்துள்ளன.பெருந்தொற்று வேகமாகப் பரவிய இந்த காலத்திலும் பிரசவங்கள் தடையில்லாமல், முன்பை விட அதிகமாக மதுரை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளன. ஜூலை 7-ந் தேதியும், அக்டோபர் 22-ந் தேதியும் ஒரே நோளில் 66 சிக்கலான பிரவசங்கள் பார்க்கப்பட்டன.
இந்த பிரசவங்களில் எந்த வித மரணங்களும் ஏற்படாமல் தாய், சேய் காப்பாற்றப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தில் எத்தனையோ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அந்த மருத்துவமனைகளில் இருந்து இந்த கால கட்டத்தில் அதிக அளவு கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை எடுக்காமல் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் கூட்டு முயற்சியுடன் சிகிச்சை வழங்கினர். அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவை பாராட்டுக்குரியது.
தற்போது மகப்பேறு சிகிச்சைக்கு தென் தமிழகத்தில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கும் மையமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மகப்பேறு துறை திகழ்கிறது ’’
இவ்வாறு அவர் பேசினார்.
தெய்வத்துக்கு நிகரான மருத்துவர்கள்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் போது சர்வமத ஆலயங்கள் கூட மூடப்பட்டன. அந்த சிக்கலான ஆபத்தான காலத்திலும் ஏழை மக்களின் கண்கண்ட கடவுளாகத்திகழ்ந்தவை, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமே.
ஒரு காசு கூட செலவின்றி இங்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. டாக்டர்களை கடவுளுக்கு நிகராகப் போற்றுவது இம்மியளவும் தவறில்லை என்பது இந்த கொரோனா காலத்தில் ஐயமின்றி நிரூபணமாகி இருப்பது நிஜந்தானே..?
–மணிராஜ்,
திருநெல்வேலி.