திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
1 min read
Devotees are not allowed in the Thiruchendur Surasamara festival
12/11/2020
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும் என்றும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 15.11.2020 முதல் 26.11.2020 வரை நடக்கிறது. இந்த விழா கொண்டாடுதல் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 15.11.2020 முதல் 26.11.2020 வரை 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இதில் 6ம் நாள் (20.11.2020) அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், 7ம் நாள் (21.11.2020) அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு 20.11.2020 அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். 20ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி, 21ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
12 தினங்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து 15,000 முதல் 20,000 வரை பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் பகுதியில் வருகை தந்து இரவில் தங்குவார்கள். மேலும் இங்குள்ள விடுதிகளிலும் பேக்கேஜ் முறையில் ஒரு வார காலத்திற்கு விடுதிகளை பதிவு செய்தும், மடங்களிலும் தங்குவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் மற்றும் கோவில் வளாகப் பகுதியில் தங்க அனுமதி இல்லை. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
ஆன்லைன் பதிவு
மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதில் 50 சதவிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும். திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமுக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பல்வேறு தற்காலிக கொட்டகைகளை ஏற்படுத்தி கூடுதலாக வரும் பக்தர்களை சமுக இடைவெளியுடன் அமர வைத்து சுவாமி தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும்.
இப்பகுதியில் கை கழுவதற்கான வசதியும், முககவசமும், சாணிடைசர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதேசம் செய்திட அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோவில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் திருவீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தனியார் அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. திருக்கோயில் மூலமாக அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.
தொலைக்காட்சி
திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின்போது நடைபெறும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யலாம்.மேற்கண்ட ஏற்பாடுகளுடன் கோவியட் 19 பாதுகாப்பினை பின்பற்றி திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவினை நடத்தப்பட உள்ளது இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.