June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஏடிஎம்மில் ஆயுதத்துடன் புகுந்த திருடன்! நிராயுதபாணியாக போராடி விரட்டிய காவலாளி!!

1 min read

Armed thief at ATM! The guard who fought armed


10/12/2020

ராமநாதபுரம் தனியார் வங்கி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க ஆயுதத்துடன் வந்த நபரை நிராயுதபாணியாகப் போராடி விரட்டியடித்த காவலாளிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

ராமநாதபுரம் சாலைத் தெரு ரோமன் சர்ச் பகுதியில் பிரபல வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் நிறைந்துள்ளன. இப்பகுதி பகல் பொழுதுகளில் பரபரப்பாக காணப்படும்.

இப்பகுதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தின் காவலாளியாக ராமநாதபுரம் வீரபத்திரசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ருத்ரபதி (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவ தினத்தன்று அதிகாலை 2 மணியளவில் ஹெல்மெட் அணிந்தபடி கையில் இரும்பு ஆயுதத்துடன் கொள்ளையடிக்கும் நோக்கில் ஏ.டி.எம் மையத்துக்குள் ஒருவர் நுழைந்தார். கைலி, பனியன் அணிந்திருந்த அந்த நபர், காவலாளி ருத்ராபதியை மிரட்டி விளக்குகளையும், கண்காணிப்பு கேமராவையும் அணைக்கும்படி கூறினார்.
அதற்கு காவலாளி ருத்ரபதி உடன்படவில்லை. உடனே அந்த நபர், தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் ருத்ரபதியைத் தாக்க முயன்றார்.
இதனைத் தடுத்த காவலாளி, தன்னிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் அந்த நபருடன் மல்லுக்கட்டி போராடினார். அதோடு, கொள்ளையடிக்க வந்த நபரை ஏ.டி.எம். மையத்திற்குள் வைத்து பூட்ட முயன்றார்.
அந்த நபர் அணிந்திருந்த ஹெல்மெட்டைப் பறித்த காவலாளி, ஆயுதத்தையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.
இதனால் காவலாளியை தாக்க முடியாமல் போன அந்த நபர், ஏ.டி.எம். மையத்தின் கதவைத் திறந்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலாளர் அரிகரன் இது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டு

இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் இதுபற்றி தகவல் அறிந்து, ருத்ரபதியை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
“நிராயுதபாணியாக இருந்த நிலையிலும், உங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொள்ளையனுடன் போராடி, வங்கிக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் கொள்ளை போகாமல் தடுத்து இருக்கிறீர்கள்” என்று கூறி, ருத்ரபதியைத தட்டிக் கொடுத்தார்.
இதே போல், வங்கி அலுவலர்களும் ருத்ராபதியை பாராட்டி மகிழ்ந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் திருடன் உருவம்

இந்நிலையில், கொள்ளையனுடன் காவலாளி போராடிய காட்சிகள், ஏடிஎம்மின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அவற்றில், கொள்ளையனின் உருவம் தெளிவாகத் தெரிகிறது.
அதை வைத்து கொள்ளையனைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

–மணிராஜ்,
திருநெல்வேலி.



About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.