பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்
1 min read
31st is the last day for backward students to apply for scholarships
11/12/2020
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உதவித் தொகை
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் இந்த பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும், விண்ணப்ப படிவங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
31-ந் தேதி கடைசி நாள்
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
மேற்காணும் கால நிர்ணயத்துக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எந்தவித விடுதலும் இன்றி புதுப்பித்தல் இனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.