உத்திரமேரூரில் கோவில் தங்கப்புதையல் கண்டெடுப்பு
1 min read
Discovery of gold coins at Uttiramerur temple
13/12/2020
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள 500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணியின்போது தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவில் புனரமைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்களும், கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.
இதற்காக பழங்கால கோவிலை இடிக்க முடிவு செய்தனர். வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த பணியினை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தங்கப் புதையல்
ஜே.சி.பி கொண்டு கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது அதன் கீழ் தங்கப்புதையல் இருப்பது தெரியவந்தது. ஒரு துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டையில் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இருந்தன.
சுமார் 100 சவரன் அளவில் தங்க நகைகள் இருந்துள்ளன. தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோவிலை முற்றிலும் இடித்துள்ளனர். கோவில் இடிப்பு மற்றும் புதையல் குறித்த தகவல் அறிந்த வருவாய்துறையினர், காவல்துறையினருடன் கோவிலுக்கு வந்து பொதுமக்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னியர் படையெடுப்பு
16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாகவும், அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அம்பாளையும், பல அரிய தெய்வ சிலைகளை தற்போது காணவில்லை என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள்.