பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு எதிராக போராட்டம்
1 min read
BJP Struggle against leader L. Murugan
11.1.2021
மதுரையில் பாரதீய ஜனதா மாநிலத்தலைவர் எல்.முருகனுக்கு எதிராக போராட்டம் நடந்தது.
பொங்கல் விழா
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊர் பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் நேற்று முன்தினம் ( சனிக்கிழமை) நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் திருப்பாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். இதற்காக விழாவுக்கு வந்த அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மக்களுடன் மக்களாக நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார்.
இதனை தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-&-
பொய் பிரசாரம்
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரசாரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தி.மு.க.வின் பொய் பிரசாரம் ஒரு போதும் மக்களிடம் எடுபடாது.
தி.மு.க.விற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் கனிமொழி முதலில் அவர்கள் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி யோசிக்கட்டும். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தி அதன் அடிப்படையில் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம்
திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் பற்றி அவர்கள் கூறும்போது, “பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டினார்கள். இதை தட்டிக் கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்துத்தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.