தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி
1 min readCorona vaccine for 2,783 people in Tamil Nadu today
16.1.2021
தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. இந்திய அளவில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாலை ஐந்து மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை இதில் இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2,783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2,684 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 99 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:&
பக்க விளைவுகள் இல்லை
தமிழகத்தில் இன்று தடுப்பூசி போடப்பட்ட 2,783 பேரும் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் 10 பிரபல டாக்டர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று முதல் நாள் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. நாளை( ஞாயிற்றுக்கிழமை) முதல் முழு வீச்சில் தடுப்பூசி பணிகள் நடைபெறும். தேவைப்பட்டால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இந்திய அளவில்..
இந்திய அளவில் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) 3,351 மையங்களில் 16,755 தடுப்பூசி போடும் பணியாளர்களை கொண்டு 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,351 மைங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
சில இடங்களில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரங்களை அனுப்புவதில் காலதாமதம், இன்றைய பட்டியலில் இல்லாத சில சுகாதார தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது போன்ற சில சிக்கல்கள் இருந்தன. பின்னர் அவைகள் சரிசெய்து கொள்ளப்பட்டன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.