அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு; 24ந்தேதி முதல் கொடுக்கலாம்
1 min readADMk Option to compete on behalf of; Can be paid from the 24th
15/2/2021
வருகிற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 24ந் தேதி முதல் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தல்
தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அமைச்சரவை பொறுப்புஏற்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தேர்தல் கமிஷன் தமிழக சட்டசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும். அநேகமாக ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தரை பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் எப்படி போட்டியிட போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.
விருப்ப மனு
இந்த நிலையில் அ.தி.முக. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விரைவில் தொடங்க உள்ளது. அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ரூ.15 ஆயிரம்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.15 ஆயிரம் ஆகும்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
கேரள சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.