இடைக்கால பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5,000 கோடி ஒதுக்கீடு
1 min read5,000 crore for crop loan waiver in the interim budget
23.2.2021
தமிழக இடைக்கால பட்ஜெட்டில பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், 2021&-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
கடந்த இரண்டு முறை சென்னை க
லைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது.
துணை முதல் அமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டு வந்தார். முதலில் ஓமந்தூரார் அரசினர் விடுதி அருகே உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு விநாயகரை வழிபட்டார்.
11வது முறை
அதன்பின்னர் 11 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை அடைந்த அவர், 2021-&2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 11-வது முறையாகும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது 3 மாத கால செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:&-
கடன்சுமை
2021&-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தள்ளுபடி
தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய், காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வருமாறு:-
கொரோனா
- சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு
- கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13,350 கோடி செலவு
- வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
- நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு
- பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
- 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
மேற்கண்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.