கொரோனா அதிகரிப்பால் தேர்தல் ஒத்திவைக்கபடுமா? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்
1 min read
Will the election be postponed due to the increase in corona? – Chief Electoral Officer of Tamil Nadu
17.3.2021
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பதிலளித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி
சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சத்ய பிரத சாகு, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.
பீகாரில் கொரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில் தான் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது என்றும், பீகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது இருந்த கொரோனா பாதிப்பு அளவுக்கு தற்போது தமிழகத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பீகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது, சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்காளர்களுக்கு நத்தம் விசுவநாதன் பணம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு, இந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக சத்ய பிரத சாகு பதிலளித்தார்.
ரூ.127.64 கோடி
மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.