இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என்ன? எய்ம்ஸ் தலைவர் விளக்கம்
1 min readWhat is the reason for the increase in corona again in India? Ames President Description
21.3.2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதற்கு எய்ம்ஸ் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (சனிக்கிழமை) மட்டும் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 112 நாட்களில் இதுவே அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்று மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது. கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைகிறவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது ஆறுதல் அளிக்கும் அம்சமாக இருக்கிறது.
காரணம் என்ன?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் செல்லும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா, மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாததும் புதிய வகை கொரோனாவுமே தொற்று பரவல் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:&
தடுப்பூசி வந்துவிட்டதால் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக மக்கள் மாஸ்க் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு விட்டனர். மாஸ்க் இல்லாமல் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை நாம் காண்கிறோம்.
இதுபோன்ற கூட்டமான இடங்கள் தான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் இடமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் என்னவெனில், பரிசோதனை செய்தல், தடம் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படை கொள்கையை தீவிரமாக பின்பற்றவில்லை. மற்றொரு அம்சம் என்னவென்றால், வைரசும் உருமாறிக்கொண்டுள்ளது.
சில புதிய வகை வைரஸ்கள் அதிக அளவில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாஸ்க் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் இன்னும் அதிகரிக்கும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மூலமே கொரோனா வைரசின் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.