தமிழகத்தில் இன்று 7,819 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 7,819 people in Tamil Nadu today
14.4.2021
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27&ந் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தினசரி பாதிப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97,668 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறெள தெரிவித்துள்ளது.
25 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,87,663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,464 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 25 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 54,315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய அளவில்…
இந்தியாவை பொறுத்தவரை இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1,027 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த வைரஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 036 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.