June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவின் 101 வயது அரசியல்வாதி கே.ஆர்.கவுரி அம்மாள் மரணம்

1 min read

101-year-old Kerala politician KR Gowri Ammal dies

11.5.2021-
கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் கவுரி அம்மாள் மரணம் அடைந்தார்.

கவுரிஅம்மாள்

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஜனாதிபதிய சம்ரக்சனா சமிதியின் தலைவருமான கே.ஆர். கவுரி அம்மாள் இன்று மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 101.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுரி அம்மாளை, சமீபத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

மந்திரி

கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் கவுரி அம்மாள், மாநிலத்தில் நீண்ட காலம் மந்திரயாகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

13 முறை எம்.எல்.ஏவாக இருந்து உள்ளார். 1957 முதல் அருர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1957 இல் தான் கேரள மாநிலத்தில் முதல் கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வந்தது. உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். அவர் 1957 முதல் 1959 வரை வருவாய், கலால் மற்றும் தேவஸ்வம் அமைச்சராகத் இருந்தார். அதன்பிறகு அவர் வருவாய், சிவில் சப்ளை மந்திரியாக இருந்தார்.

மார்ச் 1967 முதல் அக்டோபர் 1969 வரை விற்பனை வரி, கலால் மற்றும் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தார். 1980 ஜனவரி முதல் 1981 அக்டோபர் வரை விவசாய மற்றும் சமூக நல மந்திரியாக இருந்தார். மார்ச் 1987 முதல் ஜூன் 1991 வரை கைத்தொழில், சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் நீதி நிர்வாகத்துறை மந்திரியாக இருந்தார்.

நில சீர்திருத்த மசோதா

கவுரி அம்மாள் 1957 ஆம் ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது புரட்சிகர நில சீர்திருத்த மசோதாவை கொண்டுவந்தார். இது மாநிலத்தில் நில உரிமை உரிமைகளை கடுமையாக மாற்றியது.

சுமார் 16 ஆண்டுகள், 6 பல்வேறு ஆட்சியர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

சட்டம் படித்தவர்

1919ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஆலப்புழாவின் பத்தனக்காடு கிராமத்தில் கே.ஏ. ராமன் – பார்வதி அம்மா தம்பதிக்கு 7வது மகளாகப் பிறந்த கவுரி அம்மாள், இளநிலைப் பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுரி அம்மாள் 1948 இல் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார், மேலும் அவரது அரசியல் வாழ்க்கை கட்சியுடன் வளர்ந்தது. கவுரி அம்மாள் தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் இயக்கங்களில் பங்கேற்றார், மேலும் பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றுள்ளார். 1964 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுக்குப் பிறகு அவர் சிபிஐ (எம்) கட்சியில் இருந்தார்.அதே நேரத்தில் அவரது கணவரும் மூத்த தலைவருமான டி.வி தாமஸ் சிபிஐக்கு ஆதரவளித்தார்.

1994 ல், சிபிஐ (எம்) ‘கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை வெளியேற்றியது. பின்னர் அவர் தனது சொந்த அரசியல் அமைப்பை ஆலப்புழாவை தளமாகக் கொண்ட ஜனாதிபதிய சமரக்சனா சமிதி என்ற பெயரில் தொடங்கினார். உடல்நலக் குறைவு காரணமாக 2021 ஆம் ஆண்டில் அவர் அதன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.