இயற்கை ஆக்சிஜனுக்காக மரத்துக்கடியில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள்
1 min read
Corona patients lying under a tree for natural oxygen
18/5/2021
உத்தரபிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையம் இல்லாததால் எந்தவித மருத்துவ உதவிகளும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் இயற்கையான முறையில் ஆக்சிஜனை பெற மரத்தடியில் படுத்து தூங்குகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் இடம் இல்லை
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையம் இல்லாததாலும், மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற பண வசதி இல்லாததாலும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் வேப்பமர நிழலில் படுத்து ஓய்வெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மரத்தடியில்
உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மிவ்லா கோபால்ஹர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, மருத்துவர்கள், மருந்துபொருட்கள் இல்லை. தனியார் மருத்துவமனையில் அதிக பணம் கொடுத்து சிகிச்சை பெற வசதியும் இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியிலேயே திறந்தவெளி பகுதியில் கட்டில் அமைத்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.
வேப்பமரத்தடியில் கட்டில் அமைத்து சில ஊசிகள் மற்றும் காய்ச்சல் மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு படுத்து ஓய்வு எடுத்து வருகின்றனர். பொதுவாக தாவரங்கள் அனைத்தும் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதிலும் வேப்பமரத்தின் அடியில் படுத்துக்கிடந்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மை. அதனால் அவர்கள் வேப்பமரத்தடியில் ஓய்வு எடுக்கிறார்கள்.
இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் பாதிப்பால் தனது 74 வயது தந்தையை இழந்த சஞ்ஜெய் சிங் கூறுகையில், “மூச்சுத்திணறல் ஏற்படும் போது மக்கள் வேப்பமரத்தடியில் வந்து தங்கள் ஆக்சிஜன் அளவை உயர்த்திக்கொள்கின்றனர். மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். எங்களை கவனிக்க யாரும் இல்லை. எனது தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. அவர் காய்ச்சல் ஏற்பட்ட 2 நாட்களில் உயிரிழந்துவிட்டார்.” என்றார்.
கிராமத்தின் முன்னாள் தலைவர் யோகேஷ் தலன் கூறுகையில், “உண்மை என்னவென்றால் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை. கொரோனா பரிசோதனை குறித்து அதிகாரிகளிடம் கூறியபோது எங்களிடன் போதிய ஊழியர்கள் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்” என்றார்.