தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வாரிசு காயம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை
1 min readThe heirs of those killed in the Tuticorin shootings are government jobs for the wounded
21.5.2021-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வாரிசுகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் என 17 பேருக்கு மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது;-
கோரிக்கை
2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஓட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்திருந்தனர்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஓட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை நேற்று மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்ட கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் 14.5.2021 அன்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.