கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
kannayiram in camara/ short story by thabasukumar
கிரகம் சரியில்லை என்று ஜோதிடரை கண்ணாயிரமும் அவரது மனைவியும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். வரும் வழியில் என்னை பார் யோகம்வரும் என்ற பஞ்சகல்யாணி போர்டை வாங்கி வந்தார்கள். வீட்டின் முன்பக்க சுவரில் அந்த போர்டை கண்ணாயிரம் ஆணி அடித்து மாட்டினார்.
அடா….இனி எந்த பிரச்சினையும் நம்மளை அசைக்க முடியாது. யோகம்வரும். காசு வரும் என்று நெஞ்சை நிமிர்த்தினார். அவரது மனைவி, சரி… சரி… உள்ளேவாங்க என்றுஅழைத்தார். கண்ணாயிரம் வீர நடைநடந்து வீட்டுக்குள் சென்றார். அவரது மனைவி பெட்டியை திறந்து ஜாதக நோட்டையும் மறந்தும் மற்ற ரூபாய் நோட்டுகளுடன் நூறு ரூபாய் கள்ளநோட்டையும் வைத்து பூட்டினார்
.
கண்ணாயிரம் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு வாலிபர் வேகமாக அங்கு வந்தார். கண்ணாயிரம் அண்ணே, கண்ணாயிரம் அண்ணே… என்று கதவை தட்டினார். கண்ணாயிரம் திடுக்கிட்டு எழுந்தார்.
யாருய்யா இப்படி கத்துறது என்று கதவை திறந்த படி வெளியே வந்தார். கண்ணாயிரத்தை பார்த்ததும் அந்த வாலிபர் உற்சாகமாக, என்ன அண்ணே காலையிலே பேப்பர் பார்த்தீங்களா என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் பேப்பர் பார்க்கலையே என்றார். உடனே அந்த வாலிபர், ஊரே ஒரே பரபரப்பா இருக்கு. என்ன நீங்க பேப்பரை பாருங்க என்று அதட்டினார். கண்ணாயிரம் அதில் உள்ள சினிமா செய்திகளையும் படத்தையும் பார்த்தார். இதை பார்த்த வாலிபர் கோபமாக, அண்ணே.. சினிமா செய்தி இளைஞர்கள் படிக்கிறது. நீங்க கள்ள நோட்டை பற்றி போட்டிருக்க அதை முதலில் படிங்க என்றார். கண்ணாயிரம் படிக்க தொடங்கினார்.
புதுச்சேரி பஸ்நிலையத்தில் முதியவரிடம் கள்ள நோட்டை மாற்றிய மர்ம வாலிபரின் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இருவர் முகமும் சரியாக தெரியவில்லை. முதியவருக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் தொடர்பிருக்குதா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்று கண்ணாயிரம் வாசித்து முடித்தார்.
நல்ல வேளை நம்ம முகம் சரியாக தெரியவில்லை தப்பித்தோம் என்று நினைத்துக்கொண்டார். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த வாலிபரிடம் இதை ஏண்டா என்னிடம் படிக்க கொடுத்தே என்று கேட்டார்.
வாலிபர் கோபத்துடன் கண்ணாயிரத்தை மேலும் கீழும் பார்த்தார். ஏண்டா அப்படி பார்க்கிற என்று கண்ணாயிரம் மெல்ல கேட்டார். அதற்கு அந்த வாலிபர், கண்ணாயிரம் அண்ணே, மர்ம வாலிபர் கள்ள நோட்டு கொடுத்த முதியவர் ஒருபக்கம் பார்த்தா உங்களை மாதிரியே இருக்கு, என்றார். கண்ணாயிரம் திடுக்கிட்டபடி அட போப்பா நீவேற பீதியை கிளப்பாதே போ.. போ என்று விரட்டினார் அந்த வாலிபர் பேப்பரை வாங்கி மடக்கிக்கொண்டு சைக்கிளில் பறந்தார்.
கண்ணாயிரம் அடுத்து என்ன நடக்கபோகுபோகுதோ என்ற பயத்தில் இருந்தார். பஞ்ச கல்யாணி இருக்கும் போதுபயம் எதுக்கு என்று மனம் கூறியது. அப்போது போலீஸ்காரர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவரைப்பார்த்ததும் கண்ணாயிரம் திடுக்கிட்டார். என்ன யோகம் வரும் என்றால் போலீஸ்காரர் அல்லவா வருகிறார் என்று நினைத்தார்.
போலீஸ்காரர் வந்ததும் அவரை பார்த்து வணக்கம் சார் என்றார். அதற்கு அவர், யாருய்யா கண்ணாயிரம் என்கிறது என்று அதட்டினார். கண்ணாயிரம் மெல்ல நான்தான் கண்ணாயிரம் என்றார். போலீஸ்காரர் உடனே கள்ள நோட்டு சம்மந்தமாக அய்யா உங்களிடம் பேசணும்னு சொன்னார். மர்ம வாலிபரிடம் நீங்க கள்ள நோட்டு வாங்குகிற மாதிரி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கு.. உடனே அந்த கள்ள நோட்டை எடுத்துட்டு புறப்படு என்று விரட்டினார்.
கண்ணாயிரம் மனதில் தைரியத்தை வரவழைத்தபடி சார் நேற்றே வரணுமுன்னுநினைச்சேன். கொஞ்சம் தாமதமாகிவிட்டது. சார் நீங்க போங்க ஒரு ஐந்து நிமிடத்திலேயே அங்கே ஆஜராகுரேன் சார் என்றார்.
போலீஸ்காரர் உடனே இன்ஸ்பெக்டர் அய்யா மோசமான ஆளு. டிமிக்கி கொடுத்தே உனக்கு டின்கட்டிருவாரு புறப்படு என்று விரட்டினார். கண்ணாயிரம் மெல்ல சார் நீங்க போங்க.. எனக்கு பாத்ரூமில் கொஞ்சம் வேலை இருக்கு. ஜஸ்ட்டு ஐந்து நிமிடம் வந்திடுவேன் என்றார்.
போலீஸ்காரர் பரிதாபபட்டு ம்….. போபோ சீக்கிரம்வந்து சேரு என்று கூறிவிட்டு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
அடுத்த நிமிடம் கண்ணாயிரத்துக்கு வயிற்றை கலக்கியது. நேராக பாத்ரூமுக்குள் ஓடினார். பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தார். முகம் வியர்த்திருந்தது. அவரது மனைவி என்னங்க இப்படி வியர்க்குது. என்ன சமாச்சாரம் என்று கேட்டார். கண்ணாயிரம்கண் கலங்கியபடி போலீஸ்காரர் இப்போவந்தாரே பார்க்கலையா…. அந்த கள்ள நோட்டு அவங்களுக்கு வேணுமாம். ரொம்ப கேட்கிறாங்க… சரிபோய் கொடுத்திட்டு வந்திடலாமுன்னு நினைக்கிறேன்.. அதை எடுத்துட்டு வா என்றார்.
சரிங்க என்றபடி அவரது மனைவி உள் அறைக்குள் சென்றுபெட்டியை திறந்தார். மற்ற நோட்டுகளோடு சேர்த்து கள்ள நோட்டை வைத்ததால் எது நல்ல நோட்டு, எது கள்ள நோட்டு என்று தெரியாமல் திணறினார்.
ஏங்க இங்கே வாங்க கள்ள நோட்டை கண்டுபிடிக்க முடியலை என்றார்.
கண்ணாயிரம் அதை தனியா வைச்சிருக்க வேண்டியதுதானே என்று உள் அறைக்குள் சென்றார். நூறு ரூபாய் நோட்டுகளை தனியா எடுத்தார். என்ன நல்ல நோட்டும் கள்ள நோட்டும் ஒண்ணு போலத்தான் தெரியுது. நடுவுல கம்பி தெரியுதா என்று ஒவ்வொருநோட்டாக பார்த்தார். அப்போது கம்பி இல்லாத நூறுரூபாய் நோட்டு சிக்கியது. அதை எடுத்து தனியாக வைத்தார். பின்னர் குளியல் அறைக்கு சென்று முகம், கை கால் எல்லாம் கழுவிவிட்டு புது வேட்டி சட்டை அணிந்தார். முகத்துக்கு பவுடர் பூசினார். கைக்கடிகாரம் போடலாமா வேண்டாமா என்று யோசித்தார். என்ன கல்யாண வீட்டுக்கா போறோம் போலீஸ்ஸேடசனுக்கு போறோம் கைக்கடிகாரம் வேண்டாம் என்று முடிவு செய்தார். ஒரு சின்ன பையை எடுத்து கொண்டார். கள்ள நோட்டை எடுத்து கால் சட்டை பையில் வைத்தார்.
பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு நான் போயிட்டு வரட்டுமா என்று மனைவியிடம் கேட்டார். அவர் மனைவி கொஞ்சம் நில்லுங்க என்று கூறினார். பின்னர் குங்கும சிமிழில் இருந்து குங்குமத்தைஎடுத்து அவரது நெற்றியில் திலகமிட்டார். கண்ணாயிரம் மெல்ல என்ன நான் போருக்கா போறேன். திலகமிட்டுஅனுப்புற என்று கேட்டார். அவர் மனைவி உடனே எல்லாம் உங்களுக்கு கிண்டலா இருக்கு. வெற்றியுடன் திரும்பி வாருங்கள் என்று வழி அனுப்பினார்.
பழைய படங்களை பார்த்து கெட்டு போயிட்ட என்று கண்ணாயிரம் கிண்டல் அடித்தார். பின்னர் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். கொஞ்சம் நில்லுங்க ஐந்து நிமிடம் கழித்து போங்க… எட்டுமணியிருந்து பதினோருமணி மணிவரை ராகு காலம் என்று எச்சரித்தார். கண்ணாயிரமும் அதுவும்சரிதான் என்று சிரித்துக்கொண்டார். சைக்கிள் இருந்தால் வேகமாக போயிட்டு வந்திருக்கலாம். சைக்கிள் சரியில்லை.
என்ன ஐந்து நிமிடம் கடந்துட்டா. போயிட்டு வரலாமா என்று மனைவியிடம் கேட்டார். அவர் சரி போயிட்டு வாங்க. பனிரெண்டு மணிக்கு மேல எம கண்டம் அங்கே இருக்காதீங்க என்று எச்சரித்தார்.
சரி என்று கூறியபடிகண்ணாயிரம் புறப்படதயாராகினார். அப்போது ஏற்கனவே பத்திரிகையோடு வந்த வாலிபர்அங்கே சைக்கிளில் வேகமாக வந்தார். கண்ணாயிரம் அண்ண நீங்க சாதாரணமான ஆள் இல்லை. ரொம்ப முக்கியமான ஆளு. இன்ஸ்பெக்டர் சொன்னாரு. சைக்கிளில் ஏறுங்க என்றான். ஏய் இவன்தான் இன்ஸ்பெக்டருக்கிட்டே போட்டுக்கொடுத்திருகான். இவன் கூட போடலாமா வேண்டாமா என்று யோசித்தார். அடுத்த வினாடி, நம்ம பஞ்சகல்யாணி இருக்கும்போது நமக்கு பயம் ஏன் என்ற படி அந்த போர்டில் உள்ள கழுதையைபார்த்தார். என்னை பார்த்தால் யோகம் வரும் என்று இருந்தது. யோகம் வந்தாச்சு.. விடுமா சைக்கிளை என்று அந்த வாலிபரின் சைக்கிளில் தாவி ஏறினார்.
- வே. தபசுக்குமார். புதுவை