காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
1 min readPrime Minister Modi consults with Kashmir leaders
24/6/2021-
காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது.
மோடி ஆலோசனை
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் மோடி காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இதனை அடுத்து மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் மூன்றரை மணிநேரம் நடந்தது. கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.
மாநில அந்தஸ்து
இந்தக் கூட்டத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காஷ்மீர் பண்டிட் இனத்தவர்ளை மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டு அல்லது வீட்டுக்காவலில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முழு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பிரதமர் மோடி கருத்து
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜம்முகாஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் வளர்ந்த முற்போக்கான காஷ்மீரை உருவாக்குவதற்கான மிக முக்கிய நடவடிக்கை.
தொகுதி வரையறை
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எங்களின் முக்கியப் பணி. அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தொகுதி மறுவரையறைப் பணிகள் வேகமாக செய்யப்பட்ட வேண்டும். தேர்தல் நடந்து மக்களாட்சி அமைந்தால் தான் அங்கு வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே, எதிர்க்கட்சியினருடனும் கூட எதிரெதிரே அமர்ந்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசக்கூடிய சூழல் இருப்பதே.
ஜம்மு காஷ்மீரை வளமானதாக்க அங்குள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உதவ வேண்டும். அங்கு நிலையான மக்களாட்சி அமைந்தால் தான் இளைஞர்களின் கனவு மெய்ப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குலாம்நபி ஆசாத்
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்ட குலாம்நபி ஆசாத் கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் மாநிலஅந்தஸ்து வழங்க அனைத்து கட்சியினரும் வற்புறுத்தினர். ஒன்றிய அரசு மாநில அந்தஸ்தை வழங்க உறுதி கொண்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளதாக தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து
மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி கூறியதாவது:-
2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பின் காஷ்மீர் மக்கள் நிறை சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. சிறப்பு அந்தஸ்தை எங்கள் மாநிலத்திற்கு பாகிஸ்தான் வழங்கவில்லை. இந்தியா தான் வழங்கியது. எனவே 370 சட்டப்பிரிவை மீட்டெடுப்போம். இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார்.