2,000 பேருக்கு தடுப்பூசியில் மருந்துக்குப் பதில் தண்ணீர் செலுத்தி மோசடி; 10 பேர் கைது
1 min readFraud by injecting water in response to vaccination of 2,000 people; 10 people arrested
25/6/2021-
மும்பையில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மருந்துக்குப்பதில் ஊசியில் தண்ணீரை செலுத்தியுள்ளனர்.
தடுப்பூசியில் தண்ணீர்
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சார்பிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில் தனியார் மருத்துவமனை முகாம் எனக் கூறி, கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீர் செலுத்தி ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரூ.4.56 லட்சம்
மும்பை குடியிருப்பு ஒன்றில் கடந்த மே 30ம் தேதி தடுப்பூசி செலுத்தும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முகாமில் குடியிருப்பை சேர்ந்த 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒருவருக்கு ரூ.1,260 வீதம் மொத்தம் ரூ.4.56 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 120 பேருக்கு மட்டுமே வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயரில் தடுப்பூசி சான்று வந்தது. சான்று கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டதில், அந்த மருத்துவமனைகளுக்கு இச்சம்பவம் பற்றி தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
10 பேர் கைது
போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முகாமில் செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என தெரியவந்துள்ளது. வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மும்பை மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளிடம் இருந்து காலி குப்பிகளை பெற்று, அதில் தண்ணீர் நிரப்பி, தடுப்பூசி எனக் கூறி 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமானோருக்கு செலுத்தியது தெரியவந்துள்ளது.
“இதுபோன்ற போலி தடுப்பூசி முகாம்களை தடுக்க மராட்டிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தடுப்பூசி கொள்கையில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.