காமராஜரே…. ஆனாலும் உங்கள் மீது கோபம்தான்/ கடையம் பாலன்
1 min read
Kamarajare …. but angry at you / Kadayam Balan
15.7.2021
காமராஜரே நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை பெருந்தலைவர் என்று போற்றி கொண்டாடுகிறோம். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது செய்து முடித்த கர்மவீரர்தான். ஏழைகள் வாழ்வு உயர பாடுபட்ட ஏழை பங்காளன்தான். எண்ணற்ற பள்ளிக்கூடங்களை தொடங்கி கல்விக் கண் திறந்தவர்தான். தொழிற்சாலைகளை கட்டி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியவர்தான். உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையையும் பாதுகாத்தவர்தான்.
_இப்படி அடுக்கடுக்காய் பெருமைகளைச் சொன்னாலும் உங்கள் மீது அடக்கமுடியாத கோபம் உண்டு. நீங்கள் தாழ்வு மனப்பான்மைக்காரர். தான் ஒரு படிக்காதவன் என்று ஏன் நினைத்தீர்கள். அந்த காலத்து ஆறாம் வகுப்பு அப்படி என்ன குறைந்தது? ( உங்கள் காலத்தில் ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்கள். ) அந்த தாழ்வு மனப்பான்மை இல்லை என்றால் இன்னும் நாட்டில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மேலும் நாட்டை உயர்த்தி இருக்கலாம்.
நீங்கள் ஒரு சுயநலக்காரராக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் நேருவுக்குப் பிறகு பிரதமராக பொறுப்பேற்று வட கிழக்கு மாநிலங்கள் உள்பட இந்தியா முழுமையையும் ஒருங்கே முன்னேற்றி இருக்கலாம்.
நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக இருந்திருக்க வேணடும். இந்தியாவை வல்லரசாக மாற்றி இருக்கலாம்.
நீங்கள் சூழ்ச்சிக்காரராக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் இருந்த அரசியல் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி தொடர்ந்து முதல் அமைச்சராக இருந்து தமிழகத்தை முன்னேற்றி இருக்கலாம்.
ஒரு நல்ல வழிகாட்டியை உருவாக்க தவறியதால் தமிழகம் குறுமனம் படைத்தவர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.
உங்கள் பிறந்த நாளில் உங்களை போற்றி வணங்கும் அதே வேளையில் சின்ன சின்ன ஆதங்கம் இருக்கத்தானே செய்கிறது.
-கடையம் பாலன்