போலி வரலாற்றாசிரியர்/ ஆக்கம்: முத்துமணி
1 min readFake historian ../ Author: Muthumani
போலி வரலாறு எழுதிய பலர் வரலாற்று முறைக்குக் கறை செய்து போதருவாயினர்…
இத்தொடரில் ‘போதரு வாயினர்’ என்பதற்கு பொருள் என்ன?
போதருவாயினர் என்னும் சொல்லுக்குப் பொருளும் விளக்கமும் தருகவென தம்பி ஒருவர் கேட்டார்.
வரலாற்றைத் திரித்து உண்மைக்குப் புறம்பாக எழுதிய வரலாற்றாசிரியரைப் போலியானவர் என்பதோடு.. அவர்களால் தமிழர் வரலாற்றில்கறை படிந்துவிட்டது. அது போலி வரலாறு . அதாவது கற்பனை கலந்த வரலாறு என மேற்கண்ட தொடர் குறிப்பிடுகிறது என்பதை அனைவரும் அறிய முடியும்.
அந்த தொடர் இடம்பெற்ற உரைநடைக் கட்டுரையை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. குறைந்தபட்சம் அந்தப் பத்தியைப் படிக்கும் வாய்ப்பாவது கிடைத்தால்தான் போதரு என்னும் அச்சொல் என்ன பொருளில் அவ்விடத்தில் கையாளப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள இயலும்.
ஆனாலும் தம்பியின் ஆர்வம். அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். அளவுக்கு மீறிய அவரது தமிழ்த் தேடல் நம்மையும் தேடிச் செல்ல தூண்டுகிறது. ஆகையால் கொஞ்சம் முயற்சி செய்வோம்… என்று சிந்தனையை ஓட்டினேன். புத்திக்கு எட்டியவற்றை இங்கே சொல்லிவிட்டேன்.
போதனை, போதகம் என்னும் சொற்கள் உபதேசம் செய்தல் என்னும் பொருளைக் குறிக்கும்.. மதபோதகர்.. நீதி போதனை வகுப்பு… என்னும் சொற்கள் தரும் பொருள்களை உற்று நோக்க போதனை இன்னும் சொல்லே, பின்னாளில் கற்பித்தல் ஆயிற்று. போதகர் என்றால் கற்பிப்பவர் instructor. போதம் என்றால் அறிவு அல்லது ஞானம் என்று பொருள்படும் .சொல்லாகும். சிவஞானபோதம்.. என்பது மெய்கண்ட தேவர் எழுதிய ஞானநூல்… சிவனருளால் அடைந்த ஞானத்தைக் கற்பிக்கும் நூல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
போதரல்… என்னும் சொல் போகுதல் என்னும் தொழில் பெயரை குறிக்கிறது. ஓரிடத்தில் இருப்பவர்,அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுதல். அதாவது அகன்று விடுதல், நீங்கிவிடுதல். போய் விடுதல். Gone away என்று பொருள் படுகிறது.
போதரவு.. எனும் சொல்வேறு பல பொருட்களையும் குறிப்பதாக இருக்கிறது. அவற்றுள் ஆறுதல் கூறல், நயமாகச் சொல்லுதல், கணிசம், இச்சகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்பொழுது களிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம்
தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தத் தொடரில் அச்சொல்..கணிசம். என்னும் பொருளைக் குறிப்பதற்கு போதுமான வாய்ப்புகள் இருக்கின்ற என்று எடுத்துக்கொண்டு முறையான தா என்று முதலில் ஆய்வோம். கணிசம் என்றால் எண்ணிக்கையில் மிகுதல் … அளவில் மிகுதல் quantity என்று பொருள் கொள்ளவேண்டும்.. அந்த அரிசியில் சோறு ஆக்கினேன். சோறு கணிசம் இல்லை. இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்தாத வாக்காளரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த அடிப்படையில் மேற்கண்ட தொடருக்கு பொருள் காணின்,’உண்மையான வரலாற்றை மறைத்து போலி வரலாறுகளை எழுதி, நமக்குத் தவறாக போதித்த வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது’ என்பதாகப் பொருள் கொள்ளலாம்..
பூவின் படிநிலைகளில் போது என்பதும் ஒன்று… போது என்பது, அரும்பு ஒன்று பூவாக மலரப்போகும் ஒரு நிலை.. அந்த நிலையில், ஆகா,மரம் நிறைய ஏராளமான பூக்கள் பூத்து விடும் அவை காய்த்துக் குலுங்கி விடும் என்பது போல ஒரு தோற்றத்தைத் தரும்…. போது எண்ணிக்கை அதிகம் அளவில் அதிகம். ஆனால் போது எல்லாம்,பூவாகும் போது அளவில் குறையும். பூக்கள் காயாகும் போது எண்ணிக்கை இன்னும் குறையும்.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலருமிந் நோய்…
என்று வள்ளுவர் எதைப் பற்றிப் பாடினார் என்பதை நாம் அறிவோம்.
எனவே போலி வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகுதி ஆகிவிட்டது என்பதைக் குறிப்பதாகத்தான் மேற்கண்ட தொடர் அமையும் என்பதற்கும் வாய்ப்பு கணிசமாக உள்ளது.
வேறு மாதிரியாகக் கொண்டால் போதரவு என்பதை இச்சகம் என்று எடுத்துக்கொண்டு மேலும் சென்று பார்ப்போம், இச்சகம் என்னும் சொல்லுக்கு முகஸ்துதி செய்தல் flattering. என்பது பொருள்… ஒருவேளை உண்மையான வரலாற்றை மாற்றி எழுதி ஒருவருக்கு வரவேண்டிய புகழை இன்னொருவருக்கு கொண்டு செல்லும் முயற்சி… இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் மறைந்து போன ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய புகழைத் தன்னோடு வாழ்கிற ஒருவனுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது போல புனைந்து எழுதுவது அல்லது பொய்யாக எழுதுவது… முகஸ்துதிக்காக எழுதுவது என்று கொள்ளலாம். எனவே முகஸ்துதிக்காக உண்மை வரலாற்றை மாற்றி புனைந்து எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு வகையில் பார்த்தால் உண்மையான வரலாற்றை மறைத்துப் பொய்யான வரலாற்றை நயமாகச் சொல்லி நம்மை நம்ப வைத்துப் போலி வரலாற்றாசிரியர்கள்…. என்றும் பொருள் கொள்ளலாம். ஏனென்றால் போதரவு என்பதற்கு நயம்படக் கூறல் என்ற பொருளும் உள்ளது.. பொய்யுடை ஒருவன் மெய்போலும்மே..பொய்யை உண்மையைப் போல அழகாக எடுத்துச் சொல்லும்போது நாம் நம்பி விடுவோம் அல்லவா? அப்படி நடக்காத ஒன்றை அதாவது பொய்யை அழகான சொற்களால் உண்மை போல கூறிவிட்ட போலி ஆசிரியர்கள் என்று பொருள் கொள்ளலாம்.
இதை விட எளிதாக வேறு முறையில் இன்னொரு பொருளும் கொள்ளலாம். போதரு என்றால் போதல் அதாவது போய் விடுதல் என்பது பொருள்… அதை எடுத்து வைத்துக் கொண்டால் வரலாறு தெரியாதவர் அரைகுறை வரலாறு தெரிந்தவர் தமக்குத் தெரிந்தவற்றை எழுதி வைப்பது, அல்லது வரலாற்றை நன்றாக அறிந்தோர் வேண்டுமென்றே, வரலாற்றைத் திரித்து எழுதிவிட்டு போய்விட்டார்கள்… அவர்கள் போலி வரலாற்றாசிரியர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். போதரவு ஆயினர்… போய் சேர்ந்து விட்டனர்… போலி வரலாற்றை எழுதினர் போய்ச் சேர்ந்தனர். போலியான வரலாற்றை எழுதி விட்டு அவர்கள்பாட்டுக்குப் போய்விட்டார்கள். இப்போது நாம் கொள்ளும் பொருள் தான் மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது.
நம் மன்னர், வள்ளல்கள் பற்றி நாம் இன்று அறிந்துள்ள கதைகள் பலவும் கற்பனை கலந்தவை. அவை மேற்கண்ட வரலாற்று ஆசிரியர்களின் கைப்பதிவு.. கைப் புனைவு என்று சொல்லலாம்.
குமணன் தமிழுக்காகத் தலையைக் கொடுத்தது..தமிழுக்காகவே வாழ்ந்து இருக்கலாம் ஆனால் தலையை வெட்டி தட்டில் வைத்து கொடுத்தான் என்பதை அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது அல்லவா?. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி… மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன்… புறாவைக் காக்க தன் உடலிலிருந்து தசையை அரிந்து கொடுத்த சிபி.. புறாவை விரட்டி வந்த பறவையின் பசி உணர்ந்து இறைச்சியை ஏதாவது ஒருஊன் அதற்கு வழங்கும் அளவிற்கு இரக்கமும் நேர்மையும் உள்ளவன்தான் சிபி. அதை சிறப்பித்துச் சொல்வதற்காக தன்னையே வெட்டிக் கொடுத்தான் என்று எழுதியது. மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் போன்றோர் வரலாற்றிலும் திரிபுகள் இருக்கும்.. நம் முன்னோர் வீரத்தோடும் ஈரத்தோடும் மானத்தோடும் நீதியோடும் ஈகைத் திறத்தோடும் வாழ்ந்தனர். சொல்லப்போனால் தம் உயிரினும் பெரிதாக மேற்கண்டவற்றை எண்ணி வாழ்ந்தனர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த உண்மையை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல நினைத்து?? அதன் பயனாகக் கொஞ்சம் இட்டுக்கட்டிவிட்டார்களோ?… என்ற ஐயம் நமக்கும் இருக்கத்தானே செய்கிறது.
நம் வரலாற்றுடன் அளவுக்கு மீறிய கற்பனையைச் சேர்த்த காரணத்தால் இன்று மேல்நாட்டு அறிஞர் பலரும் நம்முடைய வீர வரலாற்றை, நடந்த உண்மையான வெற்றி வரலாற்றைக் கூட, ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பது வேதனையான உண்மை
‘கயல் வளர் வாட் கண்ணி போதரு:
தமிழ் முத்துமணி